ETV Bharat / state

Senthil balaji: செந்தில்பாலாஜி புழல் சிறைக்கு மாற்றம்.. மீண்டும் விசாரிக்க தயாராகும் அமலாக்கத்துறை

author img

By

Published : Jul 17, 2023, 5:59 PM IST

Etv Bharat
Etv Bharat

நெஞ்சுவலி காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சை முடிந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். மேலும், செந்தில் பாலாஜியை மீண்டும் காவலில் எடுத்து விசாரணை நடத்த அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது.

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்து வந்த செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்த வழக்கில் அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, கடந்த 13 ஆம் தேதி திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அவரது உறவினர்கள், ஒப்பந்ததாரர்கள், ஆகியோருக்கு சொந்தமான வீடு அலுவலகங்களில் சோதனை நடத்தினர். பின்னர் அன்று நள்ளிரவு அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்ததை அடுத்து திடீரென செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.

உடனே அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு செந்தில் பாலாஜியை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது இதய ரத்த குழாயில் அடைப்பு இருப்பதாகவும், உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முதன்மை அமர்வு நீதிமன்ற மேஜிஸ்திரேட் அல்லி நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டதை அடுத்து, செந்தில் பாலாஜி சிறைத்துறை கட்டுபாட்டிற்குள் கொண்டு வரப்பட்டார். மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதி கேட்டு அவரது சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுமீதான விசாரணை முடிந்து செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து கடந்த 16 ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி போலீசார் பலத்த பாதுகாப்புடன் மயிலாப்பூரில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு மாற்றம்: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கடந்த 21 ஆம் தேதி பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளபட்டது. இதனைத்தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று மாலை 4.45 மணியளவில் சிகிச்சை முடிந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை 108 ஆம்புலன்ஸ் மூலம் போலீஸ் பலத்த பாதுகாப்புடன் புழல் மத்திய சிறைக்கு (Senthil Balaji transferred to Puzhal Jail) அழைத்து சென்றனர். அங்கு அமைச்சர் செந்தில் பாலாஜியை முதல் வகுப்பு சிறையில் அடைத்தனர்.

மேலும், புழல் சிறையில் அடைக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை மீண்டும் காவலில் எடுத்து விசாரணை நடத்த அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே, செந்தில் பாலாஜியை 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறையினருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தது. இருப்பினும், செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்ததால் அவரிடம் விசாரணை நடத்த முடியவில்லை என அமலாக்கத்துறை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே மீண்டும் போலீஸ் காவல் கேட்டு நீதிமன்றத்தை நாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: "எங்க வேலை ரொம்ப ஈஸி" - பொன்முடி வீட்டில் ED ரெய்டு குறித்த முதல்வர் கூலாக பேட்டி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.