புயல், சுனாமியை இப்படித்தான் கணிக்கிறார்கள்! - அதிசயிக்க வைக்கும் விஞ்ஞானிகள்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 16, 2024, 10:45 AM IST

Updated : Mar 19, 2024, 11:12 AM IST

Etv Bharat

புயல், சுனாமி உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் ஏற்படுவதை முன்கூட்டியே கணிக்கும் கருவிகளை கடலில் நிறுவி கண்காணித்து, தகவல்களைப் பெற்று அளிக்கும் பணியை சென்னையில் உள்ள தேசிய பெருங்கடல் தொழில்நுட்பக் கழகம் (National Institute of Ocean Technology) செய்து வருகிறது.

புயல் கணிப்பு

சென்னை: நவம்பர் மாதம் வந்தாலே சென்னைவாசிகளுக்கு புயல் குறித்த அச்சம்தான். புயல் மையம் கொண்டுள்ள பகுதி, எந்த பகுதியில் கரையைக் கடக்கும் என்பது குறித்து அவ்வப்போது, செய்தி அறிவிப்புகளை கேட்ட வண்ணம் இருப்போம். இது மட்டுமல்ல 2004ம் ஆண்டு ஆழிப்பேரலைக்குப் பின்னர் முதல் கிழக்கு ஆசியாவில் எந்த நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டாலும் சுனாமி அச்சமும் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.

சரி, இந்த சுனாமி, புயல்களை எப்படி கணிக்கிறார்கள். சென்னைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என எப்படி விஞ்ஞானிகளால் உறுதியாக கூற முடிகிறது என்பதை எப்போதாவது நீங்கள் சிந்தித்ததுண்டா? இதற்கு விடையளிக்கின்றனர் சென்னை பள்ளிக்கரணையில் உள்ள தேசிய பெருங்கடல் ஆராய்ச்சிக் கழக விஞ்ஞானிகள். மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் (Ministry of Earth Science) கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்நிறுவனம், கடல் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்காெண்டு வருவதுடன், கடலின் தன்மையில் ஏற்படும் மாற்றங்களையும், அதன் மூலம் வானிலை மாற்றம், புவியியல் மாற்றம், புயல், சுனாமி போன்றவை ஏற்படுவதையும், கண்காணித்து வருகின்றது.

1996ஆம் ஆண்டு முதல் தேசிய தரவு மிதவை திட்டம் (National data buoy program) என்ற கண்காணிப்பு அமைப்பு நிறுவப்பட்டது. இதன் முதன்மை நோக்கம் இந்திய கடற்பகுதியில், டேட்டா பாய்கள் எனப்படும் நங்கூரமிட்ட தரவு மிதவை கண்காணிப்பு அமைப்புகளை நிறுவி, அவற்றின் தகவல்களைப் பெற்று பராமரித்தல் ஆகும். இந்த தரவு மிதவைகளில் (Data Buoy ) வானிலை மற்றும் கடலில் ஏற்படும் மாற்றங்களை கண்காணிக்கும் உணரிகள் (Censors) பொருத்தப்பட்டிருக்கும்.

இது தொடர்பாக, தேசிய கடல்வளத்துறை தொழில்நுட்பக் கழகத்தின் அறிவியலறிஞர் (Scientist In-charge Ocean Observations) எம்.அருள் முத்தையா ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில், " 1997 முதல் இந்தியப் பெருங்கடல், அரபிக்கடல் பகுதியில் தரவு மிதவைகளை (Data Buoy ) நிறுவி, தரவுகளைப் பெற்று வருகிறோம். அரபிக்கடல், வங்காள விரிகுடா கடல் பகுதியில் 12 ஆழ்கடல் பகுதிகள் மற்றும் 3 கடலோரப் பகுதிகளிலும் இக்கருவிகள் உள்ளன.

இது தவிர சுனாமியை கண்டறிவதற்கு 7 இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன, இவற்றில் வங்காள விரிகுடா பகுதியில் 5 இயந்திரங்களும், 2 அரபிக்கடலிலும் நிலை நிறுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன. இந்த இயந்திரங்கள் தரும் தகவல்களை பெற்று ஒசேன் இன்பர்மேஷன் சர்விஸ் (Indian National Center for Ocean Information Services) நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கிருந்து வானிலை மையத்திற்கும், பிற துறைகளுக்கும் தகவல்கள் வழங்கப்படுகின்றன என்றார்.

ஆழ்கடலில் இருக்கும் கருவிகள் கரையில் இருக்கும் கட்டுப்பாட்டு மையத்துடன் தகவல்களை பரிமாறிக் கொள்ள ஒரே வழி செயற்கைக் கோள்கள் மட்டுமே , 3 மணி நேரத்திற்கு ஒருமுறை இக்கருவிகளிலிருந்து தகவல்கள் செயற்கைக் கோள்களுக்கு அனுப்பப்படுகின்றன. இக்கருவிகள் கடலில் தடையின்றி செயல்படும் வகையில் 2 பேட்டரிகள் நிறுவப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்று சூரிய ஒளியிலிருந்து மின்சாரத்தை தயாரித்துக் கொள்ளும். ஒரு வேளை சூரிய ஒளி சோலார் பேட்டரிகள் இயங்காத பட்சத்தில் லித்தியம் அயன் பேட்டரி தானாகவே இயங்கத்துவங்கும் எனவும் அவர் கூறினார். ஓராண்டு வரையிலும் இந்த பேட்டரிகள் இயங்கு நிலையில் இருக்கும் என விஞ்ஞானி அருள் முத்தையா கூறுகிறார்.

சுனாமி ஏற்படப் போகிறது என்றால் இதற்கு முன்னதாக ஆழ்கடல் நீரோட்டத்தில் ஏற்படும் மாற்றங்களை இந்த மிதவைகளில் உள்ள சென்சார்கள் கண்டு பிடித்து எச்சரிக்கை வழங்கும். நிலத்தில் ஏற்படும் அதிர்வுகளை உணரும் கருவிகள் ஆழ்கடலில் சுமார் 4,000 மீட்டர் ஆழத்தில் தரைப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ளன. சுனாமி வந்த பின்னரும் தொடர்ந்து தரவுகளை வழங்கும். இதனைக் கொண்டு தான் எந்த பகுதியில் சுனாமி ஏற்படப் போகிறது. தாக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை விஞ்ஞானிகள் கணிக்கின்றனர். 2004ம் ஆண்டுக்கு முன்னர் இந்தியாவில் சுனாமி எச்சரிக்கை கருவிகள் இல்லை என்பதையும் அருள் முத்தையா குறிப்பிடுகிறார்.

1997ஆம் ஆண்டு தான் மத்திய அரசு புயல் பாதிப்பை கண்டறிவதற்கான தரவு மிதவைகளை (Data Buoy) பொருத்தினார்கள். இதனால் புயல் எந்த இடத்தில், எந்த நேரத்தில் வரும் என்பதையும், அதன் தாக்கம் எந்தளவிற்கு இருக்கும் என்பதையும், எந்த இடத்தில் கரையை கடக்கும் என்பதையும் 3 நாட்களுக்கு முன்னதாகவே துல்லியமாகக் கூற முடியும். இதனால் உயிரிழப்புகளை தவிர்க்கவும் , சேதங்களை குறைக்கவும் வாய்ப்பு உருவாகும்.

கடந்த காலங்களில் புயலின் தாக்கம் அதிகமாக இருந்த பகுதிகளை கணித்து அங்கே மிதவைகள் நிறுவப்பட்டுள்ளன. குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவானாலே, இந்த மிதவைகள் தரவுகளை தரத்தவங்கும். புயல் உருவாவதற்கு காற்றின் வேகம், கடல் தண்ணீரின் வெப்பம் போன்றவை தான் காரணம். கடலில் தண்ணீர் வெப்பத்தை, பாய் சிஸ்டம் கண்டறிந்து தரவுகளை அளிக்கும் என்கிறார். புயல் வருவதற்கு முன்னர் கடலில் வெப்ப அழுத்தம் அதிகமாக இருக்கும். குறைந்த காற்றழுத்தத்தில் இருந்து அதிக காற்றழுத்தமாக மாறும். கடலின் வெப்பநிலை 26 டிகிரி வரையில் உயரும் இதனை மிதவைகள் துல்லியமாக கணித்து எச்சரிக்கை தகவல்களை வழங்குகின்றன. இதன் மூலம் இயற்கைப் பேரிடர்களை கணித்து மனிதகுலத்தை பாதுகாப்பதற்கான பெரும் வசதியை தொழில்நுட்பம் வழங்குகிறது.

இயற்கை இடர்களைத் தாண்டி சில செயற்கையான இடையூறுகளையும் விஞ்ஞானிகள் சந்திக்கின்றனர். இது குறித்து பேசிய விஞ்ஞானி அருள் முத்தையா, பாய் சிஸ்டம் (Buoy System) கடலில் போடப்படுவதே மீனவர்களுக்காகவும், சமுதாயத்திற்காகவும்தான். இதனை நிலை நிறுத்தும் இடங்களில் நிறைய மீன்கள் இருக்கும். அதனை பிடிப்பதற்காக அங்கு வலைகளைப் போடும் போது, மீன்வலைகள் சேதமடையும். அதனால் சில மீனவர்கள் Buoy System கருவிகளை உடைத்து விடுகின்றனர். ஓராண்டு செய்ய வேண்டிய பராமரிப்பு பணிகளை 3 மாதத்தில் கருவிகளை உடைக்கப்படுவதால் செய்ய வேண்டியதாக உள்ளது. எனவே மீனவர்கள் அதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என வேண்டுகோள் விடுக்கிறார்.

குறிப்பாக சுனாமி மற்றும் புயல் எச்சரிக்கை தகவல் பரிமாற்றத்தில் உலக நாடுகளும் இணைந்து செயல்படுவதால், தகவல் பரிமாற்றத்திற்கு வசதியாக உள்ளது. இது தவிரவும், வடதுருவம் மற்றும் பெருங்கடல் ஆய்வு மையத்துடன் இணைந்து, ரோபோ கடலோர கண்காணிப்பு அமைப்பு, ரோபோ மீன், போன்ற தானாகவே இயங்கும் கண்காணிப்பு அமைப்புகளை உருவாகும் முயற்சிகளும் 2014ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. இவை அனைத்தும் செயல்பாட்டுக்கு வரும் போது, ஆழ்கடலில் இது வரை கண்டிராத புதிய இடங்களை காணும் வசதிகள் உருவாகும்.

இதையும் படிங்க: யூடியூப்பை குறிவைக்கும் எலான் மஸ்க்! எக்ஸ் தளத்தில் புது வசதிகள் அறிமுகம் செய்ய திட்டம்!

Last Updated :Mar 19, 2024, 11:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.