ETV Bharat / state

வேலூர் கோட்டை ஜலகண்டீஸ்வரர் கோயிலில் சனி மகாபிரதோஷம்!

author img

By

Published : Jul 16, 2023, 7:56 AM IST

வேலூர் கோட்டை ஜலகண்டீஸ்வரர் கோயிலில் சனி மகாபிரதோஷம்!
வேலூர் கோட்டை ஜலகண்டீஸ்வரர் கோயிலில் சனி மகாபிரதோஷம்!

சனி மகாபிரதோஷத்தை ஒட்டி, வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் கோயிலின் நந்திக்கு சிறப்பு அபிஷேகங்கள் உடன் மகாதீபாராதனை காட்டப்பட்டது.

சனி மகாபிரதோஷத்தை ஒட்டி, வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் கோயிலின் நந்திக்கு சிறப்பு அபிஷேகங்கள் உடன் மகாதீபாராதனை காட்டப்பட்டது

வேலூர்: வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் கோயிலில் நேற்று (ஜூலை 15) மிகவும் சிறப்பு வாய்ந்த சனி மகாபிரதோஷம் கொண்டாடப்பட்டது. இந்த சனி மகாபிரதோஷத்தை ஒட்டி நந்தி பகவானுக்கு பால், தயிர், சந்தனம், தேன், கரும்புச் சாறு, திருநீறு மற்றும் பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. இதன் பின்னர், நந்திக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

இதனையடுத்து அருகம்புல், வில்வ இலைகள், எருக்கன் மாலை உள்பட மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து மகாதீபாராதனைகள் நடைபெற்றது. இந்த சிறப்பு வாய்ந்த பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ‘அரோகரா’ என்ற முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் - அகிலாண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டது.

தொடர்ந்து, பக்தர்கள் வெள்ளத்தில் சாமி உட்பிரகார உலா வந்தது. அடுத்ததாக சிவனுக்கு உரிய வழிபாட்டில் மகா சிவராத்திரிக்கு அடுத்த படியாக முக்கிய இடம் பிடிப்பது, பிரதோஷ வழிபாடு. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் திரியோதசி திதி அன்று மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான காலத்தை பிரதோஷ காலம் என கணக்கிடப்படுகிறது.

சிவபெருமான், ஆலகால விஷத்தை குடித்து உலக உயிர்களை காக்க நீலகண்டனாக காட்சி அளித்த நேரத்தில், தேவர்கள் சிவனை வழிபட்டதாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்கு நந்தியின் இரு நம்புகளுக்கு இடையே சிவன் காட்சி தந்த காலமே பிரதோஷ காலம் என அழைக்கப்படுகிறது. அனைத்து விதமான பாவங்களையும், தோஷங்களையும் நீக்கக் கூடிய வழிபாடே பிரதோஷம் என்பது நம்பிக்கையாக உள்ளது.

இந்த பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டால் ஒரு வருடம் முழுவதும் சிவன் கோயில்களுக்குச் சென்று வேண்டிய பலனை பெற்று விடலாம் என்பது நம்பிக்கை. ஒரு சனி பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டால், ஐந்து ஆண்டுகள் சிவன் கோயிலில் சிவனை தரிசித்த பலனை பெற்று விடலாம் என்பதும் ஐதீகம். சனிக்கிழமையில் வருவது சனி மகா பிரதோஷம் என்றும் சிறப்பு பெறுகின்றன.

பிரதோஷத்திற்கு ஒரு தனிச்சிறப்பு, தனிப் பலன் உண்டு என்ற கருத்தும் இருக்கிறது. இதன் அடிப்படையில், பிரதோஷ விரதம் மேற்கொண்டால் திருமணம் கைகூடும், பிள்ளை பாக்கியம் கிடைக்கும், வறுமை விலகும், நோய்கள் நீங்கும், அனைத்து காரியங்களில் வெற்றி கிடைக்கும், அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்று சனி மகாபிரதோஷம் பல்வேறு சிறப்புகளைக் கொண்டதாக கருதப்படுகிறது.

இதையும் படிங்க: Nellaiappar Temple: காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு; கைத்தட்டி குதூகலித்த கோயில் யானை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.