ETV Bharat / state

Nellaiappar Temple: காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு; கைத்தட்டி குதூகலித்த கோயில் யானை!

author img

By

Published : Jul 15, 2023, 10:52 PM IST

நெல்லையப்பர் கோயில் ஆடிப்பூர வளைகாப்பு விழாவில், காந்திமதி அம்மனுக்கு வளையல் சாத்தப்பட்டபோது அக்கோயில் யானை தும்பிக்கையால் தரையில் தட்டி கைத்தட்டியதாக கூறப்படுகிறது.

Etv Bharat
Etv Bharat

நெல்லையப்பர் கோயில் ஆடிப்பூர வளைகாப்பு விழா

திருநெல்வேலி: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில் ஆடிப்பூர திருவிழா (Nellaiappar Temple Aadi Pooram Thiruvizha) கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் நான்காம் திருநாளான இன்று (ஜூலை 15) காந்திமதி அம்பாளுக்கு 'வளைகாப்பு உற்சவம்' வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவையொட்டி காந்திமதி அம்பாள் மரக் கேடயத்தில் வெண்பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு: தொடர்ந்து மேளதாளம் முழங்க காந்திமதி அம்பாள் சுவாமி சன்னதிக்கு சென்று அங்கு சுவாமி இடம் பட்டு வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து ஊஞ்சல் மண்டபத்திற்கு மேலவாத்தியங்கள் இசைக்க எழுந்தருளிய காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு நலங்கும், தொடர்ந்து வளையல் அணிவிக்கும் உற்சவமும் நடைபெற்றது. தொடர்ந்து அம்பாளுக்கு மகா தீபாரதனை நடைபெற்றது. அப்போது ஏராளமான பெண்கள் குழந்தை வரம் வேண்டி அம்மனுக்கு வளையல் வாங்கி கொடுத்தனர். நெல்லையப்பர் கோயில் ஆடிப்பூர வளைகாப்பு விழா (Nellaiappar Temple Aadi pooram Baby Shower) மிகவும் பிரசித்தி பெற்றது.

அம்மன் வெண்பட்டு உடுத்தி தலையில் சடை அணிந்து அழகுற காட்சி கொடுப்பார். எனவே, வளைகாப்பு கோளத்தில் அம்மனை தரிசிக்க ஆயிரக்கணக்கான பெண்கள் திரண்டனர். இந்த நிலையில் அம்மனுக்கு வளையல் அணிவிக்கும் நேரத்தில் திடீரென யானை பிளிறும் சத்தம் கேட்டது. அதாவது அம்மன் சன்னதி அருகில் நின்று கொண்டிருந்த அக்கோயில் யானை காந்திமதி திடீரென சத்தம் போட்டது. பின்னர், தனது தும்பிக்கையால் தரையில் பலமுறை ஓங்கி தட்டியது. தும்பிக்கை என்றாலே பேரழகு அதுவும் அழகான தும்பிக்கையை கொண்டு யானை தரையில் தட்டியதை எண்ணி வியப்படைந்தனர்.

இதுகுறித்து பாகனிடம் கேட்டபோது, பொதுவாக யானைகள் மகிழ்ச்சியாக ஜாலி மூடில் இருக்கும்போது தான் இதுபோன்ற சத்தம் எழுப்பி தும்பிக்கையால் தரையை தட்டும் என்றார். இவ்வாறு காந்திமதி யானை உற்சாகமாக வளைகாப்பு நிகழ்ச்சின் போது கைத்தட்டியதாக கூறப்படுகிறது. எனவே, அம்மனுக்கு வளைகாப்பு நடைபெறுவதை எண்ணி தான் யானை சந்தோஷத்தில் திகைத்துள்ளதால் பக்தர்கள் பேசிக்கொண்டனர். குறிப்பாக அம்மன் வளைகாப்பு முடியும் வரை யானை தும்பிக்கையை அடித்தபடியும் தும்பிக்கையை அங்கும் இங்கும் அசைத்தபடியும் ஆனந்தமாக காட்சி அளித்தது. இதை கேள்விபட்டு பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

காந்திமதி யானையை ஆய்வு செய்த கண்காணிப்புக்குழு: இதனிடையே, நெல்லையப்பர் கோயில் காந்திமதி யானை தனது பாகனின் பேச்சை கேட்கிறதா? 55 வயதான நிலையில் அதன் உடல்நிலை நிலவரம் உள்ளிட்டவைகள் குறித்து இன்று மாவட்ட வளர்ப்பு யானைகள் கண்காணிப்புக்குழு திடீர் ஆய்வு மேற்கொண்டது. காந்திமதி யானை தற்போது 55 வயதை கடந்த நிலையில் சமீபத்தில் உடல் பருமன் அதிகரித்து காணப்பட்டதால் கோயில் சார்பில் மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதைத்தொடர்ந்து காந்திமதி யானை வயது முதிர்வு காரணமாக எதிர்பார்த்த அளவுக்கு உடல் பருமனை குறைக்க முடியாத நிலையில், அதனை பாகன் கண்காணித்து வருகிறார். இந்நிலையில் நெல்லையப்பர் கோயிலில் காந்திமதி யானையின் உடல்நலம் குறித்து மாவட்ட வளர்ப்பு யானைகள் கண்காணிப்புக்குழுவினர் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது, மூத்த கால்நடை மருத்துவர் கலைவாணன் தலைமையில் மருத்துவ குழுவினர் யானையின் யானையின் ரத்த மதிரிகளை சேகரித்தனர்.

அதில், யானையின் குளுக்கோஸ் அளவு உப்பின் அளவு உள்பட பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதே போல், யானையின் ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டது தொடர்ந்து யானை பாகன் சொல்வதை யானை கேட்கிறதா? என்பதை குறித்து இக்குழுவினர் ஆய்வு செய்தனர்.

இதையும் படிங்க: தேனி: அல்லிநகரம் பகுதியில் வீதி உலா வந்த 6 அடி உயர நந்தி சிலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.