ETV Bharat / state

எருதுவிடும் விழாவில் காளை முட்டியதில் ராணுவ வீரர் உயிரிழப்பு!

author img

By

Published : Feb 15, 2023, 11:54 AM IST

வேலூரில் எருதுவிடும் விழா.. காளை முட்டியதில் ராணுவ வீரர் உயிரிழப்பு
வேலூரில் எருதுவிடும் விழா.. காளை முட்டியதில் ராணுவ வீரர் உயிரிழப்பு

வேலூர் மாவட்டம் கணியம்பாடி அருகே நடைபெற்ற எருதுவிடும் விழாவில், காளை முட்டியதில் ராணுவ வீரர் உயிரிழந்தார்.

வேலூர்: கணியம்பாடி ஒன்றியம் ஆற்காட்டான்குடிசை கிராமத்தில் எருதுவிடும் விழா நேற்று (பிப்.14) வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் மொத்தம் 174 காளைகள் பங்கேற்றன. அதேநேரம் புலிமேடு கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சுரேஷ்குமார் (28) என்பவர், விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். இவர், ஆற்காட்டான்குடிசையில் நடைபெற்ற எருதுவிடும் விழாவைக் காணச் சென்றிருந்தார்.

இந்த நிலையில், அங்கு விழாவில் விடுவதற்காக அவரது நண்பர் ஒருவரின் காளையைப் பிடித்தபடி சுரேஷ்குமார் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அந்த காளை மிரண்டு, சுரேஷ்குமாரின் வயிற்றில் முட்டியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த சுரேஷ்குமாரை, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், சுரேஷ்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வேலூர் கிராமிய காவல் துறையினர், சுரேஷ்குமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வேலூர் கிராமிய காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே விடுமுறைக்கு வந்து ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதேபோல் சமீபத்தில் வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த கீழ்முட்டுகூர் என்ற கிராமத்தில் நடைபெற்ற எருதுவிடும் விழாவில், புத்தூரைச் சேர்ந்த வெங்கடேசன் என்ற இளைஞர் காளை முட்டியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கே.வி. குப்பம் அருகே மாடு முட்டியதில் இளைஞர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.