சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை!
Published : Oct 15, 2023, 3:57 PM IST
தேனி: கம்பம் அருகே உள்ள சுருளி அருவி தேனி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும்.
இங்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், சுருளி அருவி நீர் பிடிப்பு பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக, தற்போது அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்களின் நலன் கருதி சுருளி அருவியில் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
இந்நிலையில், இன்று (அக்.15) ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு, சுருளி அருவியில் குளிப்பதற்காக வந்த சுற்றுலாப் பயணிகள், வெள்ளப்பெருக்கு காரணமாக அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஏமாற்றமடைந்து திரும்பிச் சென்றனர்.
இதையும் படிங்க: இந்திய மகளிர் கபாடி அணியின் பயிற்சியாளருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!