மணிப்பூர் வன்முறை: கோவையில் பழங்குடி மக்கள் பாரம்பரிய இசைக்கருவிகளுடன் நடனமாடி ஆர்ப்பாட்டம்!

By

Published : Jul 27, 2023, 6:54 PM IST

thumbnail

கோயம்புத்தூர்: மணிப்பூரில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக இரு சமூகத்தினர் இடையே கலவரம் நடைபெற்று வருகிறது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதாகவும் ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே மணிப்பூரைச் சேர்ந்து இரு பெண்களுக்கு நிகழ்ந்த வன்கொடுமை சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. மணிப்பூரில் நிலவும் இந்த கலவரத்திற்கு பாஜக அரசு தான் காரணம் எனக் கூறி பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் AITUC சங்கங்கள், தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம், இந்தியக் கலாச்சார நட்புறவுக் கழகம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாஜக அரசிற்கு எதிராகவும், மணிப்பூரில் அரங்கேறிய பெண்கள் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்தும் கண்டன பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர். மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பழங்குடியின மக்கள் மணிப்பூர் சம்பவத்தைக் கண்டிக்கும் வகையில் அவர்களது பாரம்பரிய இசைக்கருவிகளை வாசித்தும் நடனமாடியும் கண்டனங்களைப் பதிவு செய்தனர்.

இது குறித்துப் பேசிய சிபிஐ மாநிலப் பொருளாளர் ஆறுமுகம், "அகில இந்தியத் தலைமை அடுத்தகட்ட போராட்டத்தை அறிவிக்கும் போது கோவை மாவட்டத்தில் மாபெரும் போராட்டத்தை நடத்துவோம்" என்றார். மேலும், மத்திய அரசு மணிப்பூரில் அமைதி நிலவ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.