ETV Bharat / state

''இது கம்யூனிகேசன் பிரச்னை''.. அமைச்சர் கே.என்.நேரு - எம்.பி. திருச்சி சிவா சந்திப்பும் பின்னணியும்!

author img

By

Published : Mar 17, 2023, 9:09 PM IST

“இது கம்யூனிகேசன் பிரச்னை”.. அமைச்சர் கே.என்.நேரு -  எம்பி திருச்சி சிவா சந்திப்பு!
“இது கம்யூனிகேசன் பிரச்னை”.. அமைச்சர் கே.என்.நேரு - எம்பி திருச்சி சிவா சந்திப்பு!

கட்சியில் நடக்கக் கூடாதது நடந்து விட்டது எனவும், நடந்தவை நடந்ததாகவே இருக்கட்டும் எனவும் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் எம்.பி. திருச்சி சிவா ஆகியோர் கூறியுள்ளனர்.

அமைச்சர் கே.என்.நேரு மற்றும் எம்பி திருச்சி சிவா கூட்டாக செய்தியாளர் சந்திப்பு

திருச்சி: திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட கன்டோன்மென்ட் எஸ்பிஐ காலனியில் ‘நமக்கு நாமே’ திட்டத்தில் நவீன இரவு பந்து உள் விளையாட்டு அரங்கத்தை, கடந்த மார்ச் 15 அன்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே‌.என்‌.நேரு திறந்து வைத்தார். முன்னதாக இந்த விழாவில் பங்கேற்பவர்கள் பட்டியலில் மாநிலங்களவை எம்.பி. திருச்சி சிவாவின் பெயர் இடம் பெறவில்லை என அவரது ஆதரவாளர்கள், அமைச்சர் கே.என்.நேரு வருகையின்போது கருப்புக் கொடி காண்பித்து எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதனால் அமைச்சரின் ஆதரவாளர்கள், எம்.பி. திருச்சி சிவா வீட்டுக்குள் புகுந்து கார் கண்ணாடி, வீட்டுக் கதவு, ஜன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர். ‌இதனையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை அமர்வு நீதிமன்ற காவல் துறையினர் விசாரணைக்காக காவல் நிலையத்தில் வைத்திருந்தனர். அப்போது அமைச்சரின் ஆதரவாளர்கள், காவல் நிலையத்தின் உள்ளே புகுந்து அவர்களைத் தாக்கினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் உள்ளே புகுந்து தாக்கிய 5 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், அவர்களை சிறையில் அடைத்தனர். இதனால் திமுகவில் உள்கட்சி பூசல் பூதாகரமாக நடைபெறுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வந்தனர். அதேநேரம், காவல் நிலையத்தில் புகுந்து திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டது, தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை காண்பிப்பதாக அதிமுக உள்பட பல்வேறு எதிர்க்கட்சியினரும் தங்களது கடும் கண்டனத்தைத் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் அமைச்சர் கே‌.என்.நேரு, எம்.பி. திருச்சி சிவாவை அவரது இல்லத்தில் வைத்து இன்று (மார்ச் 17) சந்தித்தார். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, “நான் சென்னையில் இருந்து வந்த பிறகு, எனக்கு திருச்சி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் இருந்தன. அது என்ன நிகழ்ச்சி, அவை எங்கே நடைபெறுகிறது என்பது கூட எனக்குத் தெரியாது. முழு விவரங்களையும் மாவட்ட ஆட்சியர்தான் வைத்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜா காலனி உள்விளையாட்டு அரங்கை திறப்பதற்காக நான் சென்று கொண்டிருந்தேன். அப்போது ஒரு சிலர், எம்.பி. திருச்சி சிவா பெயர் போடவில்லை என கருப்புக் கொடி காண்பித்தார்கள். அப்போது அது எனக்குத் தெரியாது எனவும், நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்களைத்தான் கேட்க வேண்டும் எனவும் தெரிவித்தேன்.

இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியை முடித்துவிட்டு திரும்பும்போது, காவல் துறையினர் கருப்புக் கொடி காண்பித்தவர்களை கைது செய்ய பெரிய வேன் ஒன்றை சாலையில் நிறுத்திவிட்டார்கள். பின்பு சில நிமிடம் கழித்து, நான் மற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றுவிட்டேன். இந்த நிலையில் கட்சி குடும்ப வீட்டில் நடக்கக் கூடாத விஷயம் நடந்து விட்டது. என்னுடைய துரதிர்ஷ்டம் என்னவென்றால், நான் அந்த இடத்தில் இல்லை.

மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து ஆட்களைத் தேடிக் கொண்டிருக்கிறோம் என்ற தகவல், எனக்கு தொலைபேசி மூலமாக தெரிய வந்தது. இந்த பிரச்னைக்கு கம்யூனிகேஷன் இல்லாததால்தான் இது போன்ற சம்பவம் நடந்து விட்டது. இனிமேல் நடக்காது, நடக்கவும் கூடாது. தமிழ்நாடு முதலமைச்சர், ‘நீங்கள் இருவருமே திருச்சியில் கட்சியைக் கட்டிக் காத்து வருகிறீர்கள். உங்களுக்குள் எந்த விதமான பிரச்னையும் இருக்கக் கூடாது’ எனத் தெரிவித்தார்.

உடனடியாக திருச்சி சிவாவை நேரில் சந்தித்து சமாதானம் செய்ய வேண்டும் எனவும் முதலமைச்சர் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், நேரடியாக இன்று அவர் இல்லத்திற்கு வந்து, பல கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம். சமாதானமாக பேசிக் கொண்டோம். நாங்கள் சமாதானமாக இருந்தால்தான் கட்சிக்கும், ஆட்சிக்கும் நல்ல பெயர் வரும் என்று முதலமைச்சர் சொன்னார். திருச்சி சிவா என்னை விட வயதில் இரண்டு, மூன்று வயது சிறியவர்தான்.

இருப்பினும், இது போன்ற சம்பவம் நடந்தது எனக்குத் தெரியாது, தெரிந்திருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது. சிவா ஒரு மூத்த தலைவர். திமுகவில், அவருக்கு ஒரு அவமதிப்பு ஏற்பட்டால், அது கட்சிக்கு நல்லதல்ல என தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்தார். இருவரும் மனது விட்டு முழுமையாகப் பேசி விட்டோம். இதுபோன்ற நிகழ்வு இனிமேல் நடக்காது, நடக்கவும் கூடாது. திருச்சி சிவா அருமையாக பேசுவார். நான் தடுமாறித் தடுமாறிப் பேசுவேன்” எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய எம்.பி. திருச்சி சிவா, “நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும், நடப்பது நல்லதாகவே நடக்கட்டும் என்ற கருணாநிதியின் குரல் எங்கள் செவியில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. நானும், அமைச்சர் நேருவும் கருத்துகளை பரிமாறிக் கொண்டோம். இதில் நடந்த சம்பவத்திற்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

அதை நான் ஏற்றுக் கொண்டேன். எங்களைப் பொறுத்தவரை இயக்கத்தின் வளர்ச்சிதான் முக்கியம். அவர் ஆற்றும் தொண்டினை நான் ஆற்றுவது கேள்விக்குறி. அதேபோன்று நான் ஆற்றும் பணியினை, அவர்கள் வரவேற்பது வேறு பணி. ஆகையால் நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும், நடப்பவை நல்லதாகவே நடக்கட்டும்” என்றார்.

இதையும் படிங்க: கார் கண்ணாடி உடைப்பு விவகாரம் - ''தனி நபரை விட கட்சி தான் முக்கியம் என நினைப்பவன் நான்'' - திருச்சி சிவா பேட்டி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.