ETV Bharat / state

செய்ததும் - செய்யத் தவறியதும்.. திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி ஓர் சிறப்புப் பார்வை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 8, 2024, 12:55 PM IST

Updated : Jan 8, 2024, 1:58 PM IST

நெல்லை எம்பி
நெல்லை எம்பி

Tirunelveli DMK MP: நாடாளுமன்றத் தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதா? எம்பி ஞானதிரவியம் செயல்பாடு எப்படி உள்ளது என்பது குறித்து தொகுதி மக்கள் கூறிய கருத்துக்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி ஓர் பார்வை

திருநெல்வேலி: 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல், ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் நாடாளுமன்றத் தொகுதி வாரியாக, எம்பிக்கள் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஈடிவி பாரத் சார்பில், பிரத்யேக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வு குறித்த விவரங்களை பார்க்கலாம். தற்போது, திருநெல்வேலி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக திமுகவை சேர்ந்த ஞானதிரவியம் பதவி வகித்து வருகிறார்.

மாவட்டத்தின் சிறப்புகள்: தமிழகத்தின் தென்கோடியில் பல்வேறு பாரம்பரியங்களை உள்ளடக்கிய விவசாயம் நிறைந்த மாவட்டமாக நெல்லை மாவட்டம் உள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையம், மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி நிலையம், ஐஎன்எஸ் எனப்படும் இந்திய கப்பல் படை அலுவலகம் போன்ற மத்திய அரசின் உயரிய நிறுவனங்கள் மாவட்டத்தில் அமையப் பெற்றுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரை வேலியாக கொண்டுள்ள நெல்லை மாவட்டத்தில் மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை, தேயிலை எஸ்டேட், அகஸ்தியர் அருவி, பாபநாசம், களக்காடு, தலையணை அருவி, நெல்லையப்பர் திருக்கோயில் ஆகிய சுற்றுலாத் தளங்கள் அமைந்துள்ளன. மேலும், உலகப் புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா, பத்தமடை பாய், காரைக்குறிச்சி மண் பானை என பல்வேறு சிறப்புகளையும் இம்மாவட்டம் கொண்டுள்ளது.

மக்கள் தொகை: 6 லட்சத்து 69 ஆயிரத்து 490 ஆண் வாக்காளர்கள் மற்றும் 6 லட்சத்து 99 ஆயிரத்து 996 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 13 லட்சத்து 68 ஆயிரத்து 718 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டம் முழுவதும் சுமார் 20 லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.

வேலைவாய்ப்பு: நெல்லை பல்வேறு சிறப்புகள் இருந்தாலும், வேலையில்லா திண்டாட்டம் என்பது தொடர்ந்து நீடித்து வருகிறது. பெரிய அளவில் தொழிற்சாலைகள் இல்லாததால் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் வேலை தேடி சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களை நோக்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

வன்முறை: வேலைவாய்ப்பு இல்லாததால் இளைஞர்கள் சிலர் மது, கஞ்சா போன்ற போதை பொருட்களுக்கு அடிமையாகின்றனர். மேலும், இளைஞர்கள் சாதி கலவரங்களில் ஈடுபடுவது இப்பகுதியில் தொடர்ச்சியாக அரங்கேறி வருகிறது. குறிப்பாக, கையில் புத்தகங்களை சுமக்க வேண்டிய பள்ளி மாணவர்கள், அரிவாளை சுமந்து கொண்டு கலவரத்தில் ஈடுபடுகின்றனர். சமீபத்தில், சாதி வன்மத்தால் நாங்குநேரி அருகே பள்ளி மாணவனை சக மாணவர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. எனவே, ஜாதி மோதலை தடுக்கும் வகையில், இளைஞர்களுக்கு தென் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அதிகரிக்க வேண்டும் என அரசுக்கு பல்வேறு ஆணையங்கள் அறிவுறுத்தியுள்ளன.

தாமிரபரணி ஆறு: தமிழகத்தின் வற்றாத ஜீவநதி என்று அழைக்கப்படும் தாமிரபரணி ஆறு, நெல்லை மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகிறது. சுமார் 150 கிமீ தூரம் கொண்ட தாமிரபரணி ஆறு, நெல்லை,தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு நீர் ஆதாரமாக விளங்குகிறது.

ஆனால், சமீப காலமாக தாமிரபரணி ஆறு மாசடைந்து வருகிறது. தொழில் நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் நேரடியாக தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது. இதனால், தாமிரபரணி நதியை சுத்தம் செய்ய வேண்டும் என பல்வேறு அமைப்புகள் போராடுகின்றனர். தாமிரபரணி ஆற்றை நம்பி, சுமார் 86 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களில் விவசாயம் நடைபெற்று வருகிறது.

விவசாயிகள் கோரிக்கை: 118 அடி கொள்ளவு கொண்ட மணிமுத்தாறு அணை தலைவாய்க்காலில் இருந்து பொட்டல், பானாங்குளம், கங்கணாங்குளம், மூலைக்கரைப்பட்டி, முனைஞ்சிப்பட்டி போன்ற பகுதிகளுக்கு தண்ணீர் செல்லும். ஆனால், அணை நிரம்பாத சமயங்களில், இப்பகுதி விவசாயிகள் தண்ணீர் கிடைக்காமல் திண்டாடுகின்றனர். பாபநாசம் காரையாறு அணை, எளிதில் நிரம்புவதால், அங்கிருந்து உபரிநீரை மணிமுத்தாறு அணைக்கு கொண்டு வர குழாய் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பொதுமக்கள் கோரிக்கை: பாளையங்கோட்டை அருகே, ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ள நிலையில், நடுப்பகுதியில் தண்டவாளத்திற்கு மேல் ரயில்வே துறையிடமிருந்து அனுமதி கிடைக்காததால், பாலம் கட்டப்படாமல் உள்ளது. குலவணிகர்புரம் ரயில்வே கேட் அமைந்துள்ள பகுதியில், ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தும் தற்போது வரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தேர்தல் வாக்குறுதி: கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், தற்போது எம்பியாக உள்ள ஞானதிரவியம், தாமிரபரணி ஆற்றை சுத்தம் செய்ய வேண்டும், வேலையின்மையை போக்க நடவடிக்கை, புதிய தொழிற்சாலைகள் கொண்டு வர நடவடிக்கை, கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முன்னுரிமை போன்ற கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார். ஆனால், இவை அனைத்தும் தற்போது வரை வெறும் வாக்குறுதியாகவே உள்ளது என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் செயல்பாடு குறித்து, தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த ஐ.கோபால்சாமி கூறுகையில், "மக்கள் பிரதிநிதிகள் மண்ணையும், மக்களையும் காப்பாற்றுபவராக இருக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில், மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அளித்த வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை" என தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் மாவட்ட தலைவர் பாஸ்கரன் கூறுகையில், "நெல்லை மாவட்டங்களில் வேலையில்லா திண்டாட்டங்கள் மற்றும் நெல்லை-மைசூரு இடையே நேரடி ரயில் சேவையை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.

இதனையடுத்து, விவசாயி ஜெபராஜ் கூறுகையில், "மணிமுத்தாறு அணையை நம்பி பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறோம். பருவ மழை பெய்யாத காரணத்தினால், காரையாறு அணையில் இருந்து மணிமுத்தாறு அணைக்கு தண்ணீரை கொண்டு வர புதிய திட்டம் வகுக்க வேண்டும். கடந்த அதிமுக ஆட்சியில் இத்திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், வனப்பகுதிக்குள் குழாய் பதிக்கப்பட வேண்டும் என்பதால், மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டி, இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்ற நெல்லை எம்பி ஞானதிரவியம் இத்திட்டத்தை நிறைவேற்றி தருவார் என எதிர்பார்த்த நிலையில், அதற்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொள்ளவில்லை” என்று கூறினார்.

இது குறித்து கங்கணாங்குளம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராஜேந்திரன் கூறுகையில், "விவசாய பயிர்களை காட்டுப்பன்றிகள் நாசம் செய்து விடுகிறது. அவற்றை நாங்கள் தாக்கினால் சட்டப்படி குற்றம் என்கிறார்கள. எனவே, மத்திய அரசு விலங்கு பட்டியலில் இருந்து காட்டுப் பன்றிகளை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

அதனைத்தொடர்ந்து, நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ஞான திரவியத்தை தொலைபேசியில் பிரத்யேகமாக தொடர்பு கொண்ட நிலையில், "நெல்லை தொகுதிக்கு, மத்திய அரசு ரூ.25 கோடி நிதி தர வேண்டும். ஆனால், இதுவரை ரூ.17 கோடி மட்டுமே நிதி கொடுத்துள்ளனர். கரோனாவை காரணம் காட்டி ரூ.8 கோடி நிதி வழங்கவில்லை. வழங்கப்பட்ட ரூ.17 கோடி நிதியில், 20 நூலகங்கள், பள்ளி கட்டடம், வாட்டர் டேங்க் கட்டிடம், நியாய விலை கடைகள் போன்ற பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்துள்ளேன்.

மேலும், மகாராஜா நகர் ரயில்வே மேம்பால பணிகள் விரைவில் முடிவடைகிறது. குலவணிகர்புரம் ரயில்வே மேம்பாலம் அமைப்பது தொடர்பாக நிலம் கையகப்படுத்தும் பணிகள் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. தெற்கு ரயில்வேயில், அதிக வருவாய் ஈட்டும் ரயில் நிலையங்களில் ஒன்றாக திருநெல்வேலி உள்ளது. எனவே, அங்கு பல்வேறு நவீன திட்டங்கள் செயல்படுத்தப்பட இருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் தொகுதி முழுவதும் மக்களை சந்தித்து வருகிறேன். என்னை தொகுதியில் பார்க்க முடியவில்லை என மக்கள் கூறுவதை ஏற்க முடியாது" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஆடு.. சாதுர்யமாக மீட்ட தீயணைப்பு துறையினர்..!

Last Updated :Jan 8, 2024, 1:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.