ETV Bharat / state

கும்பகோணம் தீ விபத்து, 19ம் ஆண்டு நினைவு நாள் - குழந்தைகளை இழந்த பெற்றோர் கண்ணீர்!

author img

By

Published : Jul 16, 2023, 7:12 PM IST

குழந்தைகளை இழந்த பெற்றோரின் கதறல்: கும்பகோணம் தீ விபத்து, 19 ம் ஆண்டு நினைவு நாள் !
குழந்தைகளை இழந்த பெற்றோரின் கதறல்: கும்பகோணம் தீ விபத்து, 19 ம் ஆண்டு நினைவு நாள் !

உலகமே ஸ்தம்பித்துப் போன கும்பகோணம் தீ விபத்தின் 19ம் ஆண்டு நினைவு நாளான இன்று குழந்தைகளை இழந்த பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் கண்ணீர் மல்க மலர்த்தூவி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

கும்பகோணம் தீ விபத்து, 19ம் ஆண்டு நினைவு நாள் - குழந்தைகளை இழந்த பெற்றோர் கண்ணீர்!

தஞ்சாவூர்: 2004-ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி, கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளியில் நடந்த கோர தீ விபத்தில் 94 அப்பாவி குழந்தைகள் தீயில் சிக்கி இரையாகினர். அந்த கொடூரச் சம்பவத்தின் 19ம் ஆண்டு நினைவு நாளான இன்று சம்பவம் நடந்த பள்ளி முன்பு, குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர் மற்றும் பலர் மலர்கள் தூவியும் கண்ணீர் மல்க தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

2004ம் ஆண்டு உலகையே உலுக்கிய கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் காசிராமன் தெருவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பள்ளியில் பயின்ற 94 சின்னஞ்சிறு குழந்தைகள் தீக்கு இரையாகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 18 குழந்தைகள் படுகாயமடைந்தனர். இதன் 19ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இதனையொட்டி சம்பவம் நடந்த பள்ளி முன்பு குழந்தைகளை இழந்த பெற்றோர், சமூக ஆர்வலர்கள் எனப் பல தரப்பினர் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து குழந்தைகளை நினைவு கூர்ந்தனர். பின்னர் அவர்களுக்கு பிரியமான பிஸ்கட், இனிப்பு வகைகள், பழங்களை வைத்து கண்ணீர் மல்க அவர்களது திருவுருவப் படத்திற்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர். ஆண்டுகள் 19 ஆனாலும் இதன் சோகமும் வடுவும் இன்னும் மாறவில்லை.

இதையும் படிங்க: Delhi Fire : டெல்லி அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து! தலைநகரை தொடரும் சோதனைகள்!

பொதுமக்கள் மட்டுமின்றி அரசு தலைமை கொறடா கோவி செழியன், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம், கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன், மாநகராட்சி துணை மேயர் சு.ப. தமிழழகன், மாநகராட்சி உறுப்பினர்கள், திமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் ஊர்வலமாக வந்து தீக்கு இரையான குழந்தைகளின் திருவுருவப்படத்திற்கு முன்பு, மலர் வளையம் வைத்தும், மலர் மாலைகள் அணிவித்தும், மலர்கள் தூவியும் கண்ணீர் மல்க தொடர்ந்து அஞ்சலி செலுத்தினர்.

அப்போது எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன், பள்ளி முன்பு அஞ்சலி செலுத்துவதற்காக திரண்டு வந்திருந்த அனைவருக்கும், பிஸ்கெட் பாக்கெட்கள், குளிர்பானம் மற்றும் தண்ணீர் பாட்டில் அடங்கிய தொகுப்பு பைகளை வழங்கினார்.

தொடர்ந்து இன்று முற்பகல், பாதிக்கப்பட்ட பெற்றோர் சம்பவம் நடந்த பள்ளியில் இருந்து மலர் வளையமுடன் ஊர்வலமாகப் புறப்பட்டு, பாலக்கரை பகுதியில் உள்ள நினைவிடத்தில், மலர் வளையம் வைத்தும் மலர்கள் தூவியும் கண்ணீர் மல்க மரியாதை செலுத்தினர்.

இதையும் படிங்க: வீட்டின் கதவை உடைத்து ரூ.28 லட்சம், 9 சவரன் நகை திருட்டு - சம்பவ இடத்தில் எஸ்பி ஆய்வு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.