ETV Bharat / state

சேலத்தில் திறந்தவெளி இறைச்சி கடைகளுக்கு தடை.. ஒழுங்குமுறைகளை வெளியிட்ட ஆட்சியர்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 12, 2023, 10:43 AM IST

Etv Bharatசேலத்தில் திறந்தவெளி இறைச்சிக் கடைகளுக்கு தடை
Etv Bharatசேலம் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம்

Salem news: சேலத்தில் திறந்தவெளியில் இறைச்சி கடைகள் மற்றும் அறுமனைகள் இயங்க அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

சேலம்: சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில், உணவு பாதுகாப்புத் துறையின் சார்பில் நேற்று (அக்.11) இறைச்சி கடைகள் மற்றும் அறுமனைகள் ஒழுங்குபடுத்துதல் தொடர்பான ஆலோசனை குழுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கூறியதாவது, “சேலம் மாவட்டத்தில் ஆரோக்கியமான முறையில் இறைச்சிகள் வாங்கிப் பயன்படுத்துவதை உறுதி செய்திடும் வகையில் உணவு பாதுகாப்புத் துறை, மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், மாவட்டத்தில் 1,000 இறைச்சிக் கடைகள் மட்டும் உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் உரிமம் பெற்று செயல்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரிக்கு மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பெயர் - கல்லூரி முதல்வர் பெருமிதம்!

குறிப்பாக, கடைகளில் விற்கப்படும் இறைச்சிகள் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளின்படி, பொதுமக்கள் பார்வையில் படும்படி கடைகளின் முன்புறம் இறைச்சிகளை காட்சிப்படுத்தக் கூடாது. பொது இடங்களில் இறைச்சிக்காக ஆடுகளை வெட்டுதல், இறைச்சிக் கடைகளில் துருப்பிடித்த கொக்கிகள் மற்றும் கத்திகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, துருப்பிடிக்காத ஸ்டீல் மற்றும் எஃகு போன்றவற்றால் செய்யப்பட்ட கருவிகளைப் பயன்படுத்தவும்.

மேலும், திறந்தவெளியில் விற்கப்படும் இறைச்சிகளில் வாகனப் புகை மற்றும் தூசிகள் படிந்து, சுகாதாரக்கேடு ஏற்படாத வகையில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அறுமனைகளில் வெட்டப்பட்ட இறைச்சியை மூன்று மணி நேரத்திற்குள் விற்பனை செய்தல் மற்றும் இறைச்சி விற்பனையாளர்களுக்கு உரிய மருத்துவ தகுதிச் சான்று பெறப்பட்டுள்ளதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி பகுதியில் திறந்தவெளியில் இறைச்சி கடைகள் மற்றும் அறுமனைகள் இயங்க அனுமதி வழங்கக் கூடாது எனவும், இதற்கென உணவுப் பாதுகாப்பு உரிமம் பெறுவதற்கு முன்பு உள்ளுர் நிர்வாகத்தினரிடமிருந்து தடையில்லாச் சான்று பெற்றிருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சுகாதாரமான முன்மாதிரி இறைச்சிக் கடைகளை சேலம் மாவட்டத்தில் உருவாக்கிட வேண்டுமெனவும், சேலம் மாவட்டத்தில் இறைச்சிக் கடைகள் மற்றும் அறுமனைகளை ஒழுங்குபடுத்தும் பணிகளை இரண்டு மாத காலத்திற்குள் தொடர்புடைய அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: விருதுநகரில் மதப்பிரிவினையை தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு; ஆர்எஸ்எஸ் பிரமுகர்களுக்கு நிபந்தனையற்ற முன்ஜாமீன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.