ETV Bharat / state

குடியிருப்புக்குள் புகுந்த மழை நீர்.. பேருந்தை மறித்து பொது மக்கள் போராட்டம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 23, 2023, 10:11 PM IST

பேருந்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
ஈரோட்டில் குடியிருப்புக்குள் புகுந்த மழை நீர்

ஈரோட்டில் பெய்த கனமழை காரணமாக தாழைக்கொம்பு புதூர் குடியிருப்பு பகுதியில் நீர் புகுந்ததை எதிர்த்து அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோட்டில் குடியிருப்புக்குள் புகுந்த மழை நீர்

ஈரோடு: தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக கோபிசெட்டிபாளையம் அருகே, தாழைக்கொம்பு புதூர் பகுதியில் 50 க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்ததால், பேரூராட்சி நிர்வாகம் நிரந்தர தீர்வு காண வேண்டும் என இன்று (நவ.23) அப்பகுதி மக்கள் அரசு பேருந்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள கூகலூர், தாழைக்கொம்பு புதூர், சமைதாங்கி, குளத்துகடை மற்றும் சுற்றுப்புற பகுதியில் நேற்று (நவ.22) இரவு கன மழை பெய்தது . இந்நிலையில், அதிக மழை காரணமாக, மழை நீர் வெளியேற வழியில்லாத நிலையில், தாழைக்கொம்பு புதூர் பகுதியில் உள்ள 50 க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.

வீடுகளுக்குள் மழை நீரானது 3 அடி உயரத்திற்கு தேங்கியதால் வீடுகளில் இருந்த மக்கள் வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். கடந்த முறை வீடுகளில் புகுந்த மழை நீர் காரணமாக வருவாய்த்துறையினர் நடத்திய விசாரணையில், பல ஆண்டு காலமாக மழை நீர் அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் வழியாகவே பள்ளத்தை சென்றடைந்துள்ளது.

இதனையடுத்து, நிலத்தின் உரிமையாளர், தடுப்பு சுவர் அமைத்ததால், மழை நீர் வெளியேற வழியில்லாமல் 100 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை சூழ்ந்து 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்தது தெரியவந்தது. இந்நிலையில், நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக மீண்டும் தாழைக்கொம்பு புதூர் பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இரவு நேரத்தில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். இரவு முதல் மழை நீர் சூழ்ந்திருந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி மக்கள் ஏற்கனவே பலமுறை கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே, தாழைக்கொம்பு புதூர் பகுதியில் மழைக்காலங்களில் வீடுகளுக்குள் மழை நீர் போகாதவாறு பேரூராட்சி நிர்வாகம் நிரந்தர தீர்வு காண வேண்டுமென அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மக்கள் இன்று ஒன்று திரண்டு அந்த வழியாக வந்த அரசு பேருந்து மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோபிசெட்டிபாளையம் போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை உருவாகியது. அதனைத்தொடர்ந்து, கூகலூர் பேரூராட்சி சார்பில், குடியிருக்கும் பகுதியில் உள்ள மழை நீரை வெளியேற்றும் பணியில் பேரூராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: ஈரோடு பிச்சைக்காரன் பள்ளம் ஓடை பாதிப்பு; ரூ.7 கோடி மதிப்பில் புதிய திட்டத்திற்கு பரிந்துரை - அமைச்சர் முத்துசாமி தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.