ETV Bharat / state

ஈரோடு பிச்சைக்காரன் பள்ளம் ஓடை பாதிப்பு; ரூ.7 கோடி மதிப்பில் புதிய திட்டத்திற்கு பரிந்துரை - அமைச்சர் முத்துசாமி தகவல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 23, 2023, 9:37 AM IST

Minister Muthusamy press meet: மழை காரணமாக ஈரோடு பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க சுமார் ரூ.7.80 கோடி மதிப்பீட்டில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

Minister Muthusamy press meet
அமைச்சர் முத்துச்சாமி

அமைச்சர் முத்துச்சாமி பேட்டி

ஈரோடு: ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் நள்ளிரவில் பெய்த கனமழை காரணமாக, நீர்நிலைகளில் மழை வெள்ளம் ஏற்பட்டு, அங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. இதன் தொடர்ச்சியாக, ஈரோடு மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட மல்லிகை நகர் அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகே செல்லும் பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில் மழை வெள்ளம் அதிகரித்ததன் காரணமாக, அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் உள்ள சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது.

இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதையடுத்து, மாவட்டம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தில் உள்ள சுமார் 100க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் இணைந்து, மழைநீர் வடிகால் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ஜேசிபி இயந்திரம் கொண்டு மழை நீரை வெளியேற்றும் பணியானது துரிதமாக நடைபெற்று வந்தது. இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு போதுமான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.

இந்நிலையில், மழைநீர் வடிகால் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து மல்லிகை நகர் குடியிருப்பு பகுதிகளில் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி நேரில் ஆய்வு நடத்தினார். அப்போது பொதுமக்கள் கோரிக்கையைக் கேட்டறிந்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, “பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில் சக்தி சாலை - பவானி சாலை குறுக்கே செல்லும் பாலத்தில் தடுப்புகள் அதிகரித்ததன் காரணமாக, குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதையடுத்து, நிரந்தரத் தீர்வாக மாநகராட்சி சார்பில் சுமார் ரூ.7 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் வரைவுத் திட்டப் பணிகள் தயார் செய்யப்பட்டு, அரசுக்கு அனுப்பட்டுள்ளது.

கூடிய விரைவில் அரசிடம் இருந்து நிதி பெற்று, திட்டப் பணிகள் தொடங்க உள்ளது. அதன்பிறகு என்ன மழை பெய்தாலும் தண்ணீர் வீட்டிற்குள் வராது. தண்ணீர் செல்வதற்கு தடையாக உள்ள பாலம் அகற்றப்பட உள்ளது. அதற்கு முன்பு 20க்கும் மேற்பட்ட ஜேசிபி வாகனங்களைக் கொண்டு ஓடையில் உள்ள மரங்கள், தடுப்புகள் ஆகியவற்றை அகற்றி தற்காலிகமாக ஆழப்படுத்தும் பணிகள் செய்ய இருப்பதாகவும்" தெரிவித்தார்.

இதையும் படிங்க: கனமழை எதிரொலி; தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.