மதுரை மாவட்டம் கடச்சனேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்பாபு (24). இவர், சென்னையில் ஒரு தனியார் கார் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றினார். தற்போது, கரோனா தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் மோகன்பாபு தனது வீட்டிற்கு வந்தார்.
இதனையடுத்து அவர், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள ராமராஜபுரத்தில் உள்ள தனது தாய்மாமா ராமசாமி என்பவரின் வீட்டிற்கு வந்துள்ளார். அதன்பின் ராமராஜபுரத்தில் உள்ள தனது நண்பர்களுடன் சேர்ந்து தாய்மாமா தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றுள்ளார்.
குளித்து முடித்தப்பின் ஒவ்வொருவராக கிணற்றின் மேல்பகுதிக்கு வந்தனர். அப்போது மோகன்பாபு மேலே வந்தபோது படிக்கட்டில் கால் வழுக்கி கிணற்றுக்குள் விழுந்தார். விழுந்த அழுத்ததில் மோகன்பாபு தண்ணீர் மூழ்கினார். இதைப்பார்த்த நண்பர்கள் உடனடியாக கிணற்றில் குதித்து மோகன்பாபுவை காப்பற்ற முயன்றனர். இருப்பினும் அந்த முயற்சி முடியாமல் போனது.
அதன்பின் நிலக்கோட்டை தீயணைப்பு துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின்பு மோகன்பாபுவின் உடலை மீட்டனர். தொடர்ந்து அவரது உடல் உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதுகுறித்து விளாம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பெரு நிறுவனங்களைத் தாக்கும் வைரஸ்!