ETV Bharat / state

முரசொலி பஞ்சமி நில விவகாரம்.. எல்.முருகனுக்கு அதிர்ச்சி கொடுத்த சென்னை உயர் நீதிமன்றம் !

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 5, 2023, 1:18 PM IST

defamation charges against minister l.murugan
அமைச்சர் எல்.முருகன் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்ய மறுப்பு

defamation charges against minister l.murugan: பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் கட்டுப்பட்டுள்ளதாக கருத்து தெரிவித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மீது அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது எனக் குற்றம்சாட்டி, தமிழ்நாடு பாஜக செயலாளர் சீனிவாசன் என்பவர் தேசிய பட்டியலினத்தவர், பழங்குடியினர் ஆணையத்தில் புகார் அளித்து இருந்தார். இது குறித்து, கடந்த 2019 ஆம் ஆண்டு வேலூரில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசியதாக, தமிழக பாஜவின் அப்போதைய தலைவர் எல்.முருகன் மீது முரசொலி அறக்கட்டளை தரப்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

தன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி, மத்திய இணை அமைச்சராக இருக்கும் எல்.முருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. வழக்கு குறித்து திமுக தரப்பில், ஆதாரங்கள் இல்லாமல் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாக அவதூறு பரப்பும் வகையில் கருத்து தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும் முரசொலி அலுவலகத்துக்கான பட்டா ஆவணங்கள் தங்களிடம் இருப்பதால், தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

தொடர்ந்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தரப்பில், பட்டியலினத்தவர்கள் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டதையே கூட்டத்தில் பேசியதாகவும், தனிப்பட்ட முறையில் திமுக மீது அவதூறு பரப்ப வேண்டும் என்ற எண்ணம் தனக்கு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, மனு மீதான தீர்ப்பை கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று (செப். 5) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, பஞ்சமி நிலத்தில் முரசொலி அறக்கட்டளை கட்டப்பட்டதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்த கருத்துக்கு எதிராக திமுக தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டார். மேலும், 3 மாதங்களில் வழக்கை விசாரித்து முடிக்கவும் கீழமை நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க: வண்டலூர் உயிரியல் பூங்கா போறீங்களா!... அப்போ இத படிங்க முதல்ல..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.