சென்னை: பி.எம்.டபிள்யு. நிறுவனம் சென்னை ஓஎம்ஆர் சாலையில், தனது புதிய விற்பனையகத்தைத் திறந்துள்ளது.
பிரபல வாகனம் தயாரிப்பு நிறுவனமான பி.எம்.டபிள்யு., குன் விநியோகஸ்தர் வாயிலாக சென்னை ஓஎம்ஆர் சாலையில், சோழிங்கநல்லூர் பகுதியில் புதிய விற்பனையகம், பழுதுநீக்கும் கடை ஒன்றைத் திறந்துள்ளது. இது 6500 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் ஆறு வாகனங்களைக் காட்சிப்படுத்த முடியும்.
பி.எம்.டபிள்யு. நிறுவனத்தின் கார்கள், இருசக்கர வாகனங்கள், மினி நிறுவன கார்கள் இந்த விற்பனையகத்தில் காட்சிப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனங்களின் உதிரி பாகங்களும், இதர பொருள்களும் இங்கு விற்பனை செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து பி.எம்.டபிள்யு. குழுமத்தின் இந்தியத் தலைவர் விக்ரம் பவா பேசுகையில், "பி.எம்.டபிள்யு. நிறுவன பொருள்களை மக்களுக்கு வெவ்வேறு தளங்கள் மூலம் விற்பனை செய்யும் வகையில், இந்தப் புதிய விற்பனையகம் திறக்கப்பட்டுள்ளது. சென்னை எங்களுக்கு மிகவும் முக்கியமான சந்தை. அதனால்தான் இங்கு அதிநவீன விற்பனையகத்தைத் திறந்துள்ளோம்" என்றார்.