ETV Bharat / bharat

சர்வதேச கரலாக்கட்டை தினம்.. புதுவையில் 32 நாடுகளைச் சேர்ந்த 108 பேர் கரலாக்கட்டை சுற்றி உலக சாதனை..

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 12, 2023, 11:05 PM IST

international karalakattai day celebrated in puducherry
புதுச்சேரியில் சர்வதேச கரகக்கட்டை தினம் கொண்டாடப்பட்டது

International Karalakattai Day: புதுச்சேரியில் உலக கரலாக்கட்டை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற உலக சாதனை நிகழ்வில், 32 நாடுகளைச் சேர்ந்த 108 பேர் கலந்துகொண்டு கரலாக்கட்டை சுற்றி உலக சாதனை படைத்தனர்.

புதுச்சேரியில் சர்வதேச கரலாக்கட்டை தினம் கொண்டாடப்பட்டது

புதுச்சேரி: பாரம்பரிய கலையான கரலாக்கட்டையைக் குறித்து அடுத்து வரும் தலைமுறையினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் டிசம்பர் 12ஆம் தேதி உலக கரலாக்கட்டை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு புதுச்சேரி பூரணாங்குப்பம் ஜோதி சிலம்பம் சத்திரியக் குருகுலம் சார்பில் உலக கரலாக்கட்டை தினத்தை முன்னிட்டு, 12வது ஆண்டாக 'அசிஸ்ட் வேர்ல்ட் ரெகார்டு' (Assist World Record) நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுச்சேரி பேரடைஸ் கடற்கரையில், ஜோதி சிலம்பம் சத்திரிய குருகுல நிறுவனர் கலைமாமணி ஜோதி செந்தில் கண்ணன் தலைமையில் இன்று (டிச.12) நடைபெற்ற இந்த உலக சாதனை நிகழ்ச்சியை, சபாநாயகர் செல்வம் தொடங்கி வைத்தார். இதில் பாஜக மாநிலச் செயலாளர் வெற்றிச்செல்வன் முன்னிலை வகித்தார்.

அசிஸ்ட் வேர்ல்டு ரெகார்ட் அமைப்பின் செயற்மேலாளர் தமிழ்வாணன், தேசிய ஒருங்கிணைப்பாளர் அருண் முன்னிலையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், 32 நாடுகளைச் சேர்ந்த 6 வயது முதல் 95 வயது வரை உள்ள ஆண்கள், பெண்கள் என மொத்தம் 108 பேர் கலந்து கொண்டனர்.

இடைவிடாமல் 32 நிமிடம் நடைபெற்ற இந்த சாதனை நிகழ்ச்சியில் பித்தம், வாதம், கபம் என்ற அடிப்படையில் ஒவ்வொரு பாடமும் 108 முறை என மெய்ப்பாடம் ஆயிரத்து 296 முறையும், கரலாக்கட்டை 324 முறையும் என மொத்தம் ஆயிரத்து 620 முறை சுற்றி சாதனை படைத்தனர். மேலும், ஆன்லைன் மூலமாக பல்வேறு நாடுகளில் வசிப்பவர்களும் இதில் உலக சாதனை படைத்தனர்.

இது குறித்து ஜோதி சிலம்பம் சத்திரியக் குருகுல நிறுவனர் ஜோதி செந்தில் கண்ணன் கூறுகையில், “பித்தம், வாதம், கபம் என்ற அடிப்படையில் நடைபெற்ற இந்த அசிஸ்ட் வேர்ல்ட் ரெகார்டு நிகழ்ச்சியில் 108 பேர் கலந்துகொண்டு, மெய்ப்பாடம் ஆயிரத்து 296 முறையும், கரலாக்கட்டை 324 முறையும் என ஆயிரத்து 620 முறை சுற்றி சாதனை படைத்தார்கள். மெய்ப்பாடம் மற்றும் கரலாக்கட்டை சுற்றும் பொழுது உடம்பில் உள்ள நோய்கள் நீங்கி ஆரோக்கியமாக வாழலாம்” என அவர் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆட்டோக்களில் நிலவேம்பு குடிநீர் விநியோகம் - தொடங்கி வைத்த அமைச்சர்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.