உலகளவில் இன்றளவும் கொடிய நோயாக தான் புற்றுநோய் பார்க்கப்பட்டு வருகிறது. உயிர்களை எளிதாக பறிக்கும் இந்தப் புற்றுநோயில் பல வகைகள் உண்டு. சில புற்றுநோய் பாதிப்புகளை முறையான சிகிச்சை மற்றும் உணவு முறைகள் மூலம் தடுத்திட முடியும். அத்தகைய, புற்றுநோயை எதிர்க்கும் உணவு முறையை குறித்து தான் இக்கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.
புற்றுநோய் சிகிச்சைக்கு முன்பும் சரி, பின்பும் சரி குறிப்பிட்ட சில உணவுகளை உட்கொள்வது நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. இதன் மூலம் நோய்த்தொற்றின் அபாயத்தை குறைக்க முடியும். இதுகுறித்து கூடுதல் தகவல்களுக்காக 21 ஆண்டுகளாக ஊட்டச்சத்து கல்வியில் வளமான அனுபவம் கொண்ட ஊட்டச்சத்து நிபுணர் ரோஹினி தினிஸை அணுகினோம்.
நன்றாக சாப்பிடுவது, பல வகையான பானங்களை குடிப்பது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அதிகரித்து நோயை எதிர்த்து போராடும். இதனால், நோயாளிக்கு புற்றுநோய் சிகிச்சையால் ஏற்படும் பாதிப்புக்களையும் சமாளிக்க முடியும். ஒருவர் ஆரோக்கியமாக இருக்கும் சமயத்தில், ஊட்டச்சத்துகள் மற்றும் கலோரிகள் கிடைக்கும் உணவுகளை சாப்பிடுவது பெரிய விஷ்யம் இல்லை. அதே சமயம், புற்றுநோய் சிகிச்சை பின்பற்றுகையில் உணவுகளை தேர்ந்தேடுப்பது கடினமாகும். சிலருக்கு பக்கவிளைவு ஏற்படும் அல்லது உடல் சோர்வடைந்து காணப்படும்.
கீழே குறிப்பிட்டுள்ளவை பின்பற்றினால் எளிதாக தடுத்திட முடியும்:
கார்போஹைட்ரேட்:
உடல் மற்றும் மூளைக்கான ஆற்றலின் முதன்மை ஆதாரமாக கார்போஹைட்ரேட் கருதப்படுகிறது. தானியங்கள் அதிகளவில் சாப்பிடலாம். அதே சமயம், சர்க்கரை பயன்படுத்துவதற்கு பதிலாக சிறிய அளவு வெல்லம் அல்லது தேன் பயன்படுத்துவது உடலுக்கு நல்லது.
புரோட்டீன்:
உடல் செல்கள் மற்றும் திசுக்களின் வளர்ச்சியை மேம்படுத்தவும், அறுவை சிகிச்சை, கீமோதெரபி அல்லது கதிர்வீச்சு சிகிச்சையின் பின்னர் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த அதிகளவிலான புரத சத்துக்கள் நோயாளிக்கு தேவைப்படுகிறது. புரதம் சரியான அளவில் இல்லாவிட்டால் எடை இழப்பு, நோய் பாதிப்பு ஏற்படக்கூடும். மீன், முட்டை, பருப்பு வகைகள், நட்ஸ், கடலை வெண்ணெய் ஆகியவற்றில் ஆரோக்கியமான புரதம் உள்ளது. பால் பொருள்கள், சிவப்பு இறைச்சிகள் மற்றும் கோழிகளை தவிர்ப்பது நல்லது.
கொழுப்புகள்:
உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களில் கொழுப்பும் முக்கிய பங்கு வகிக்கிறது. அவை உடல் திசுக்களைப் பாதுகாப்பது மட்டுமின்றி வைட்டமின்கள் ஏ, டி, ஈ மற்றும் கே ஆகியவற்றை இரத்தத்தின் மூலம் உறிஞ்சி கொண்டு செல்ல உதவுகின்றன.
வைட்டமின் மற்றும் தாதுக்கள்
உடல் சீராக செயல்பட சிறிய அளவு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் தேவை. வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ மற்றும் செலினியம் மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்கள் ஆக்ஸிஜனேற்றிகளாக செயல்படுகின்றன. இது செல்களை ஃப்ரீ ரேடிக்கல்களின் சேத விளைவுகளிலிருந்து பாதுகாக்கிறது. ஊட்டச்சத்து அதிகம் கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகள் புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கும்போது உணவின் ஒரு பகுதியாக கட்டாயம் இருந்திட வேண்டும்.
தண்ணீர்
உடலின் உயிரணுக்கள் சரியாக செயல்பட நீர் அதிகளவில் அருந்த வேண்டும். போதுமான தண்ணீர் குடிக்கவில்லை என்றாலோ அல்லது வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு உடலில் நீரிழப்புக்கு வழிவகுக்கும். புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கப்படும்போது, நாள் முழுவதும் மற்ற பானங்களுடன் கூடுதலாக குறைந்தது 7-8 கிளாஸ் தண்ணீராவது குடிக்க வேண்டும்.
அதே போல், வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு சமயங்களில் அதிகப்படியான நீரை அருந்தினால் மட்டுமே உடலால் நோயை எதிர்த்து போராட முடியும். இல்லையென்றால் நாள் முழுவதும் சோர்வாக தான் காணப்படுவிர்கள்.
எனவே, புற்றுநோய் பாதிப்புக்கும் ஊட்டச்சத்துக்களுக்கு அதிகளவிலான தொடர்பு இருப்பதால், சரியான அளவில் ஊட்டச்சத்துக்களை உடலில் ஏற்றிக்கொள்வது அவசியம். இது மற்ற நோய்களும் வராமல் தடுத்திட உதவியாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.