ETV Bharat / bharat

கேரளாவில் நிபா வைரஸ் தாக்கி இருவர் உயிரிழப்பு - அரசுக்கு ஒத்துழைக்க பினராயி விஜயன் வேண்டுகோள்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 12, 2023, 4:14 PM IST

Updated : Sep 12, 2023, 7:12 PM IST

Etv Bharat
Etv Bharat

Nipah virus in Kozhikode Kerala: கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உயிரிழந்த இருவரும் நிபா வைரஸ் தாக்குதலால்தான் இறந்து உள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோழிக்கோடு (கேரளா): கேரள மாநிலம் மருதோங்கரா பகுதியைச் சேர்ந்த 49 வயது நபர் ஒருவர், கடந்த ஆகஸ்ட் 27 அன்று உடல்நலக் குறைவு காரணமாக கோழிக்கோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். பின்னர், அவர் சிகிச்சை பலன் இன்றி ஆகஸ்ட் 30 அன்று உயிரிழந்து உள்ளார்.

அதேபோல், இவரைப் பார்க்க வந்த அயன்சேரியைச் சேர்ந்த 40 வயது நபர் ஒருவர் உடல்நலக் குறைவினால் நான்கு நாட்களாக வடகராவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உள்ளார். இதனையடுத்து, நேற்று (செப் 11) அவர் கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் உயிரிழந்து உள்ளார்.

இந்த நிலையில், உயிரிழந்த இருவரும் நிபா வைரஸ் தாக்குதலால் இறந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. இந்த சந்தேகத்தின் அடிப்படையில் ஆகஸ்ட் 27 அன்று உயிரிழந்த நபரின் மாதிரிகளை சேகரிக்க முடியவில்லை. ஆனால், நேற்று உயிரிழந்த நபரின் மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு இன்று மாலை அனுப்பப்பட இருக்கிறது.

மேலும், இறந்தவரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. இதனிடையே, இரண்டவதாக உயிரிழந்த நபர் உடன் தொடர்பில் இருந்த 22 வயது இளைஞர், 5 மற்றும் 9 வயதுமிக்க சிறுவர்கள் மற்றும் 9 மாத குழந்தை ஆகியோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிலும், 9 மாத குழந்தை வெண்டிலேட்டர் உதவி உடன் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறது. இந்த நிலையில், உயிரிழந்த இருவரும் நிபா வைரஸ் தாக்குதலால்தான் உயிரிழந்துள்ளனர் என உறுதி செய்யப்பட்டு உள்ளது. கேரள சுகாரதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அவசர கால உயர்மட்ட கூட்டத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தின் மூலம், கோழிக்கோடு மாவட்டத்திற்கு சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

அதிக அளவிலான மருத்துவர்கள் வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட உள்ளதாகவும், மோசமான உடல்நலக் குறைவு உள்ளவர்களை கட்டாயமாக தனிமைப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளார். மேலும், தற்போது உயிரிழந்தவர்கள் உடன் தொடர்பில் இருந்த அனைவரது பட்டியலும் தயார் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.

இதனைத் தொடர்ந்து, கேரள முதலமைச்சர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு உள்ள வீடியோ பதிவில், “இது குறித்து யாரும் கவலை கொள்ள வேண்டாம். உயிரிழந்தவர்களின் நபர்கள் உடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர். அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். சுகாதாரத்துறை மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என தெரிவித்து உள்ளார்.

நிபா வைரஸ் அறிகுறிகள் மற்றும் பரவல்: உலக சுகாதார நிறுவனத்தின்படி, நிபா வைரஸ் பழ வெளவால்களால் உருவாகிறது. இது மனிதர்கள் மட்டுமல்லாது விலங்குகளுக்கும் ஆபத்தான ஒன்று. சுவாச நோய்கள், காய்ச்சல், தசை வலி, தலை வலி, தலைச்சுற்றல் மற்றும் குமட்டல் ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகள் ஆகும்.

நிபா வைரஸ் எப்படி பரவியது? தென்னிந்தியாவில் முதல் நிபா வைரஸ் தாக்குதல் கோழிக்கோடு மாவட்டத்தின் பெரம்புராவில் 2018 மே மாதத்தில் பதிவானது. இதில் 18 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, 2019ஆம் ஆண்டு எர்ணாகுளம் மாவட்டத்தில் ஒருவர் பாதிகப்பட்டு உள்ளார். இதன் பிறகு, 2021ஆம் ஆண்டு கோழிக்கோடு மாவட்டத்தில் சதமங்கலத்தின் பசூர் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் நிபா வைரஸால் உயிரிழந்து உள்ளார்.

இதையும் படிங்க: இந்தியாவில் 10-ல் 6 பெண்களுக்கு இரத்தசோகை.. ஆய்வு முடிவு கூறும் அதிர்ச்சி தகவல்!

Last Updated :Sep 12, 2023, 7:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.