ETV Bharat / sukhibhava

இந்தியாவில் 10-ல் 6 பெண்களுக்கு இரத்தசோகை.. ஆய்வு முடிவு கூறும் அதிர்ச்சி தகவல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 12, 2023, 1:19 PM IST

Anemia: இந்தியாவில் 10-ல் 6 இளம்பெண்கள் இரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் ஆய்வாளர்கள் வளர் இளம் பருவதில் தாய்மை அடைவதே இதற்கு முக்கிய காரணமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

டெல்லி: தேசிய குடும்ப சுகாதார ஆய்வுகள் (NFHS) நாடு முழுவதும் உள்ள 13 முதல் 19 வயதிற்கு உட்பட்ட 1 லட்சத்து 9 ஆயிரத்து 400 பேரிடம் ரத்த சோகை தொடர்பான ஆய்வை மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்வில் நாட்டில் உள்ள 28 மாநிலங்களில் 21 மாநிலங்களை சேர்ந்த பதின்ம வயது(13-19) பெண்கள் மத்தியில் இரத்த சோகை விகிதம் கடந்த ஆண்டுகளை காட்டிலும் 2 மடங்கு அதிகரித்துள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

15 முதல் 19 வயதிற்கு இடைபட்ட வயதுடைய பெண்களுக்கு திருமணம் மற்றும் அதனுடன் தாய்மை அடைவது, குழந்தைக்கு பாலூட்டுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த இரத்த சோகை விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. அதிலும் குறிப்பாக கிராமப்புறங்களில் படிப்பறிவில் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த பெண்கள் மற்றும் எஸ்.சி, எஸ்.டி போன்ற தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெண்கள் மத்தியில் இரத்த சோகை விகிதம் அதிக அளவில் காணப்பட்டுள்ளது.

இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களை பொருத்தவரை மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் பெண்களுக்கான இரத்த சோகை விகிதம் குறைவாக காணப்பட்டுள்ளது. அதற்கான காரணம் குறித்து ஆய்வாளர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனர். அதில் அம்மாநிலங்களை சேர்ந்த மக்கள் தங்கள் அன்றாட வாழ்கையில் சிவப்பு அரிசி, தானியங்கள், கீரை, இறைச்சி உள்ளிட்ட இரும்பு சத்து மிக்க உணவுகளை இயல்பாகவே எடுத்துக்கொள்கின்றனர் என தெரியவந்துள்ளது.

கடந்த 2015-16ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்திய அளவில் இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட பதின்ம வயது பெண்களின் விகிதம் 5-ல் இருந்து 11 மடங்காக அதிகரித்துள்ளது. குறிப்பாக 18 வயதிற்கு முன்பு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி பாலூட்டி வரும் பெண்கள்தான் இதில் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரம் படித்த வளரிளம் பெண்கள் திருமணம் செய்திருந்தாலும், குழந்தை பெற்றிருந்தாலும் ஆரோக்கியமான உணவை உட்கொள்வதன் மூலம் அவர்கள் குறைந்த அளவிலேயே பாதிக்கப்பட்டுள்ளனர் என ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய அளவில் இரத்த சோகையால் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படும் நிலையில் அதை கட்டுக்குள் கொண்டுவர இந்திய சுகாதார அமைப்பு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தபோதிலும் நாடு முழுவதும் இரத்த சோகை நோயால் பாதிக்கப்படும் பெண்களின் விகிதம் நாளுக்கு நாள் பல மடங்கு அதிகரித்து வருகிறது.

இதற்கு முக்கிய காரணம் குழந்தை திருமணம் மற்றும் பதின்ம வயதில் தாய்மை அடைவது தான் முக்கிய காரணம் என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இரத்த சோகை நோயில் இருந்து பெண்களை மீட்டெடுக்க ஒட்டு மொத்த சமுதாயத்தின் ஒத்துழைப்பும், தனி மனித ஆரோக்கிய கருத வேண்டும் என்பதையே இந்த ஆய்வு முடிவு கூறுகிறது.

இதையும் படிங்க: BMI பரிசோதனை ஆரோக்கியத்தை உறுதி செய்யுமா - மருத்துவர்கள் கூறுவது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.