தென்காசி: சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் தம்பதி பலி! - tenkasi car accident
Published : Apr 29, 2024, 10:39 AM IST
தென்காசி: திருநெல்வேலி பாளையங்கோட்டையைச் சேர்ந்த பில்டிங் கான்ட்ராக்டர் வெங்கடேஷ் மற்றும் இவரது மனைவி சுமித்ரா இருவரும், இராஜபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றுவிட்டு திருநெல்வேலி திரும்பி வந்துள்ளனர். இந்த நிலையில், சங்கரன்கோவில் நெடுங்குளம் விலக்கு பகுதி அருகே வந்து கொண்டிருந்த போது, கார் கட்டுப்பாட்டை இழந்து, எதிர்பாராத விதமாகச் சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
பின்னர் இந்த விபத்து குறித்து அப்பகுதியினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர், அப்பகுதியினர் உதவியுடன் தீவிரமாக செயல்பட்டு, காரை பள்ளத்திலிருந்து வெளியே எடுத்து கணவன், மனைவி இருவரையும் மீட்டனர். ஆனால், நீர் நிறைந்த பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால், காருக்குள் இருந்த இருவரும் பள்ளத்திலிருந்த நீருக்குள் மூழ்கி வெளியே வர முடியாமல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.
தற்போது இருவரது உடலையும் மீட்ட போலீசார், சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எதிர்பாராத விதமாக நேர்ந்த இந்த கார் விபத்து கணவன், மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.