ETV Bharat / state

"இது பேராபத்து..” - சீமான் கடும் விமர்சனம்! - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 10, 2024, 4:40 PM IST

Seeman Campaign In Coimbatore
Seeman Campaign In Coimbatore

Seeman Campaign in Coimbatore: ”மோடிக்கு தாடி தான் வளர்க்கத் தெரியுமே தவிர, மரம் வளர்க்கத் தெரியாது. பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக இவற்றையெல்லாம் மீண்டும் மீண்டும் பிடித்து தொங்குவது என்பது மிகப்பெரிய பேராபத்து” என்று சீமான் தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர்: நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு, அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அக்கட்சியின் கோவை நாடாளுமன்ற வேட்பாளர் கலாமணியை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், "திராவிட கட்சிகளின் ஆட்சி வந்த பிறகு தான் சகித்துக் கொள்ள முடியாத ஊழல், லஞ்சம், ஒழுங்கற்ற நிர்வாகம், அவதூறு பேச்சு, விமர்சனங்கள், அநாகரிக பேச்சுக்கள் ஆகியவை அரங்கேறியது. மோடியின் ரோடு ஷோவில் கருத்தைப் பேசுவதில்லை. கையை மட்டும் ஆட்டிக்கொண்டு செல்கிறார்.

இவர்கள் பத்தாண்டுகளில் செய்ததை எதையும் எடுத்துப் பேச முடியாதவர்கள். தான்தோன்றித்தனமான ஒரு கொடுங்கோல் ஆட்சி நடக்கிறது. திடீரென பணம் செல்லாது என அறிவித்தார். யாரைப் பிடிக்கவில்லையோ, அவர்களை என்ஐஏவில் தூக்கி உள்ளே போடுகிறார்கள்.

எதிர்க்கட்சிகளே இருக்கக் கூடாது என அழித்து ஒழிக்க நினைத்தால், நாட்டில் ஜனநாயகம் எங்கே இருக்கும்? எதிர்க் கருத்து எழக்கூடாது என குரல்வளையை நெறித்தால், எங்கே மக்களாட்சி மலரும்? இதை சர்வாதிகாரம் என்று கூடச் சொல்ல முடியாது, இதை கொடுங்கோன்மை என்று தான் சொல்ல வேண்டும்.

இந்தியாவில் எந்த சட்டத்தையும் மதிப்பதில்லை. அடிப்படையில் இருந்து மாற்ற வேண்டும். எதைப் படித்தால் எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்ற கல்விமுறை தான் இங்கே இருக்கிறது. அனைவரும் எனது நாட்டிற்கு வந்து தயாரியுங்கள் என்பது வாடகைத் தாய் பொருளாதாரக் கொள்கை. இந்த நாடு வாடகைக்கு விடப்பட்டிகிறது.

நீட் தேர்வை அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனம் நடத்துகிறது. இவ்வளவு பெரிய நாட்டில் தனது மாணவர்களுக்கு ஒரு தேர்வைக் கூட நடத்த முடியவில்லை. இந்த ஐந்து ஆண்டுக்கான தேர்தல் என்பது நல்லது செய்வதற்காக அல்ல. 95 சதவீத நாட்டை விற்று விட்டார்கள். இன்னும் ஐந்து விழுக்காடு தான் இருக்கிறது. இன்னும் ஐந்து வருடங்கள் கொடுத்தோம் என்றால், அதையும் விற்று விடுவார்கள். அதை அதானியும், அம்பானியும் வாங்கி விடுவார்கள்.

எல்லாமே தனியார்மயம் என்றால், இந்த தேர்தல் எதற்கு? தனியார் சிறப்பாக நடத்துவார்கள் என்றால், ஆட்சியையும் தனியாரிடம் கொடுத்துவிட வேண்டியது தானே? இதற்கு பேர் தான் ஜனநாயகம், மக்களாட்சி, சுதந்திர நாடு? தனிப்பெரும் முதலாளிகளின் வளர்ச்சியை ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சி என கட்டமைப்பது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை?

கரோனா நேரத்தில் 80 கோடி ஏழைகளுக்கு 5 கிலோ அரிசி கொடுத்ததாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவிக்கிறார் என்றால், 80 கோடி ஏழைகள் என அரசே கூறுகிறது. எதை வளர்ச்சி என இவர்கள் வைக்கிறார்கள்? இந்த தேர்தல் வரைக்கும் குடிநீர் சரியாகக் கொடுப்பார்கள். தேர்தல் முடிந்த பிறகு வீடு வீடாகச் சுற்றுவீர்கள்.

மோடிக்கு தாடி தான் வளர்க்கத் தெரியுமே தவிர, மரம் வளர்க்கத் தெரியாது. கிளீன் இந்தியா என்பார், இந்தியா சுத்தமாகிவிட்டதா? மக்களுக்கு சுத்தமான குடிநீரைக் கொடுங்கள், சுவாசிக்க சுத்தமான காற்றைக் கொடுங்கள் அதைத் தராத அரசு சந்திர மண்டலத்தில் நீர் இருக்கா, காற்று இருக்கா என தேடுகிறது.

மோடிக்கு இன்னும் ஐந்து ஆண்டுகள் கொடுத்தால் சவக்குழி தோண்டி, நம்மை புதைத்து மூடிவிட்டுப் போவார். அதே பஞ்சம், பசி, வறுமை, ஏழ்மை, கொடுமை தான் இருக்கப் போகிறது. மதம், சாமி அது இருந்தால் அவர்களுக்கு போதும், சாதி மதத்தை வைத்து ஆட்சி செய்து கொண்டிருப்பவர்கள் மக்களைப் பற்றி எப்படி சிந்திப்பார்கள்?

இத்தனை முறை ஓடோடி வந்து ரோடு ஷோ செய்யும் மோடி, நீங்கள் வெள்ளத்தில் மிதந்த பொழுது ஒரு தடவையாவது ஓடி வந்து பார்த்திருக்க வேண்டும் அல்லவா? அல்லது அறிக்கை விட்டிருக்க வேண்டும் அல்லவா? நம்மை அவர்கள் ஒரு உயிராகக் கூடக் கருதமாட்டார்கள்.

இந்த நிலத்தை ஏன் இந்தியாவோடு வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால், இந்த நிலத்தில் உள்ள வளம் தான் காரணம். மீத்தேன், ஈத்தேன் கங்கை நதிக்கரையில் இல்லையா? ஏன் தமிழ்நாட்டில் எடுக்கிறார்கள்? எனது மண்ணை நாசமாக்கும் வேலை நடந்து கொண்டிருக்கிறது. இப்போது இருப்பதையாவது காப்பாற்ற வேண்டும். பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக இவற்றையெல்லாம் மீண்டும் மீண்டும் பிடித்துத் தொங்குவது என்பது மிகப்பெரிய பேராபத்து" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: “நான் ஏன் தென்காசி தொகுதியில் மீண்டும் மீண்டும் போட்டியிடுகிறேன்?” - கிருஷ்ணசாமி பிரத்யேக விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.