ETV Bharat / state

புதுக்கோட்டையில் அரசு நிலத்தை தனிநபர் தனக்கானது எனக் கூறியதால் அமைச்சர் நிகழ்ச்சி ரத்து!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 24, 2024, 11:16 AM IST

Updated : Feb 24, 2024, 2:13 PM IST

புதுக்கோட்டையில் அரசு நிலத்தை தனிநபர் சொந்தம் கொண்டாடியதால் அமைச்சர் நிகழ்ச்சி ரத்து
புதுக்கோட்டையில் அரசு நிலத்தை தனிநபர் சொந்தம் கொண்டாடியதால் அமைச்சர் நிகழ்ச்சி ரத்து

Pudukkottai Land Acquisition issue: புதுக்கோட்டையில் அமையவிருந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான இடம் தன்னுடையது என தனிநபர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அமைச்சர் பங்கேற்பதாக இருந்த அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

புதுக்கோட்டையில் அரசு நிலத்தை தனிநபர் தனக்கானது எனக் கூறியதால் அமைச்சர் நிகழ்ச்சி ரத்து

புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக, 24வது வார்டு உள்ள பெரியார் நகரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க, 2,400 சதுர அடியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா, நகர மன்றத் தலைவர் திலகவதி ஆகியோர் பங்கேற்று, பூமி பூஜை செய்து, அடிக்கல் நாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில், ஆரம்ப சுகாதார நிலையம் அமைய இருந்த இடம் தனக்குச் சொந்தமானது எனவும், அந்த இடத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கக் கூடாது எனவும், உள்ளூர் தனியார் நாளிதழ் நிர்வாகி ஒருவர் திடீரென குற்றம் சாட்டியுள்ளார். இதனால் நடைபெற இருந்த அடிக்கல் நாட்டு விழா திடீரென ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, அமைச்சர் நிகழ்ச்சியும் ரத்தானது. இதையறிந்த அப்பகுதி இளைஞர்கள், நகராட்சிக்குச் சொந்தமான இடத்தை எப்படி தனி நபர் உரிமை கொண்டாட முடியும் எனக் கூறி, திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த நகர காவல்துறையினர், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், அப்பகுதி இளைஞர்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, நகராட்சி ஆணையர் சியாமளா ஆகியோர், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இளைஞர்கள், நகராட்சிக்குச் சொந்தமான இடம் எப்படி தனிநபருக்கு உரிமையானது என கேள்வி எழுப்பினர்.

அப்போது நகராட்சி ஆணையர், தற்போது வரை இந்த இடம் நகராட்சிக்குச் சொந்தமானதாகவே உள்ளது என்பதற்கான ஆவணத்தை காண்பித்து விளக்கினார். நகராட்சிக்குச் சொந்தமான இடம் என ஆவணங்கள் இருந்தபோதும், தனிநபர் தனக்குச் சொந்தமான இடம் எனக் கூறியதால், நிகழ்ச்சியை ஏன் ரத்து செய்ய வேண்டும் எனவும் கேள்வி எழுப்பினர்.

உடனே அடிக்கல் நாட்ட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய எம்எல்ஏ முத்துராஜா, இந்த பிரச்னைக்கு உடனடியாக தீர்வு கண்டு, எந்த சிக்கலும் இல்லாமல் வேறு ஒரு நாளில் பிரமாண்டமாக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து நடத்துவோம் என உறுதி அளித்தார்.

இதனையடுத்து, இளைஞர்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர். தொடர்ந்து அப்பகுதி இளைஞர்கள் பேசும்போது, ரூ.2.5 கோடி மதிப்புள்ள நிலத்தை உடனடியாக மீட்டு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் எனவும், இல்லையென்றால் இன்னும் இரண்டு நாட்களில் பெரும் திரளான போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட நிலம் குறித்து நகராட்சி அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: புதுக்கோட்டையில் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட அரசுப் பள்ளி சீருடைகள்; உரிய நடவடிக்கை எடுக்கப் பொதுமக்கள் கோரிக்கை..

Last Updated :Feb 24, 2024, 2:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.