ETV Bharat / state

கொடைக்கானலில் 5 நாட்களாக எரியும் காட்டுத்தீ.. 500 ஏக்கருக்கு மேல் எரிந்து நாசம்! - KODAIKANAL Forest Fire

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 1, 2024, 3:41 PM IST

Kodaikanal Hills Fire Accident
Kodaikanal Hills Fire Accident

Kodaikanal Hills Fire Accident: கொடைக்கானலில் கடந்த 5 நாட்களாக எரிந்து வரும் காட்டுத்தீயால் சுமார் 500 ஏக்கருக்கும் மேல் காடுகள் அழிந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

திண்டுக்கல்: தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது கொடைக்கானல். தமிழ்நாடு மட்டுமல்லாமல், பிறமாநிலங்களில் இருந்தும் கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். தற்போது கொடைக்கானல் மலைப் பகுதியில் கடந்த 2 மாதங்களாக கடும் வறட்சி நிலவி வருகிறது.

இந்நிலையில், கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களான பூம்பாறை, மன்னவனூர், பூண்டி உள்ளிட்ட பல்வேறு மலைக் கிராமங்களில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக காட்டுத்தீ எரிந்து வருகிறது. பூம்பாறை, மன்னவனூர் பகுதியில் சிறிய அளவில் பற்றிய காட்டுத்தீ, தொடர்ந்து எரிந்து வருகிறது.

தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சி துரிதமாக நடைபெறாததால், காட்டுத்தீ அருகில் இருக்கக்கூடிய வனப்பகுதிகளுக்கும் பரவத் துவங்கியுள்ளதாக உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதில் பூம்பாறை, மன்னவனூர், கூக்கால் உள்ளிட்ட 3 கிராமங்களுக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் தொடர்ந்து காட்டுத்தீ இரவு, பகலாக எரிவதால், சுமார் 500 ஏக்கருக்கு மேலாக காடுகள் இதுவரை எரிந்து நாசமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பசுமை போர்த்திய புல்வெளிகள் போன்ற காட்சியளித்த வனப்பகுதிகள் அனைத்தும், தற்போது சாம்பல்கள் நிறைந்த காடுகளாகக் காட்சியளிக்கிறது. மேலும், பூம்பாறையில் இருந்து மன்னவனூர் மற்றும் கூக்கால் உள்ளிட்ட கிராமங்களுக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு 2 நாட்கள் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றும் அப்பகுதிகளில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது.

தொடர்ந்து பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள், 11 நகராட்சிகளிலிருந்து தண்ணீர் வண்டிகள், உள்ளூர்வாசிகள், வனப்பணியாளர்கள், நகராட்சி அதிகாரிகள், ஊரக உள்ளாட்சி அதிகாரிகள், தீயணைப்புத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். காட்டுத் தீ அருகில் இருக்கக்கூடிய வனப்பகுதிக்கும் தொடர்ந்து சென்று கொண்டிருப்பதால், முழுமையாக காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த ஹெலிகாப்டர் உள்ளிட்ட நவீன இயந்திரங்கள் மட்டுமே கை கொடுக்கும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். இதில், மரங்கள், செடிகள் உள்ளிட்டவை முழுவதுமாக எரிந்து நாசமாக இருக்கின்றன. வனப்பகுதிகளில் இருக்கக்கூடிய வன விலங்குகள் பற்றி தற்போது வரை எந்த தகவலும் இல்லை.

இதுகுறித்து சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், “இரண்டு நாட்கள் திடீரென்று தடை விதிக்கப்பட்டதால் மன்னவனூர், கூக்கால் பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் முன்பதிவு செய்து வைத்திருந்த அறைகளுக்குக் கூடச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது கவலை அளிக்கிறது” என்றனர்.

இதையும் படிங்க: ஏற்காடு பேருந்து விபத்து: 5 பேர் பலி.. வாகன ஓட்டிகளுக்கு கலெக்டர் விடுத்த எச்சரிக்கை! - Yercaud Bus Accident

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.