ETV Bharat / state

ஏற்காடு பேருந்து விபத்து: 5 பேர் பலி.. வாகன ஓட்டிகளுக்கு கலெக்டர் விடுத்த எச்சரிக்கை! - Yercaud Bus Accident

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 1, 2024, 9:53 AM IST

Yercaud Bus Accident incident
ஏற்காடு பேருந்து விபத்து

Yercaud Bus Accident: ஏற்காடு மலைப்பாதையில் தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில், ஏற்காட்டிற்கு வரும் வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி உத்தரவிட்டுள்ளார்.

ஏற்காடு பேருந்து விபத்து

சேலம்: ஏற்காட்டிலிருந்து சேலம் நோக்கி வந்த தனியார் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கொண்டை ஊசி வளைவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) ஏற்காட்டிற்குச் சென்ற பயணிகள் தனியார் பேருந்து, ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தது.

அப்போது 13ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே வந்து கொண்டிருக்கும்போது, பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. அதோடு பேருந்தின் பிரேக் பிடிக்காததால், பக்கவாட்டு தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்துக்குள்ளானது. அதில், பேருந்தில் பயணம் செய்த 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும், 20-க்கும் மேற்பட்டோர் உடனடியாக மீட்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதில், 3 பேர் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்த நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அவர்கள் உயிரிழந்தனர். அதேபோல, மேலும் 3 பேர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால், இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இறந்தவர்கள் அனைவரும் சேலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த ஏற்காடு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கோடை காலம் என்பதால் ஏற்காட்டிற்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். அதைக் கருத்தில் கொண்டு அனுபவம் உடைய ஓட்டுநர்கள் மட்டுமே ஏற்காடு மலைப்பாதையில் வாகனங்களை இயக்க அனுமதிக்கப்படுவர். இதற்கென ஏற்காடு அடிவார சோதனைச் சாவடியிலேயே காவல்துறையினர் மற்றும் வட்டாரப் போக்குவரத்துத் துறையினர் மூலம் ஆய்வு செய்த பின்னர் மட்டுமே வாகனங்களை அனுமதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், மலைப்பகுதிகளில் வாகனங்களை இயக்க அனுமதிக்கப்பட்ட 30 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லும் வாகனங்கள் மற்றும் விதிகளை மீறும் வாகன ஓட்டிகளைத் தீவிரமாகக் கண்காணித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தீவுத்திடலுக்கு மாறும் பிராட்வே பேருந்து நிலையம்! - Broadway Bus Stand Change

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.