தமிழ்நாடு

tamil nadu

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் 95% நிறைவடைந்துள்ளன - ஜே.பி.நட்டா தகவல்

By

Published : Sep 23, 2022, 7:12 AM IST

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் 95% நிறைவடைந்துள்ளன - ஜே.பி.நட்டா தகவல்
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் 95% நிறைவடைந்துள்ளன - ஜே.பி.நட்டா தகவல் ()

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் 95 விழுக்காடு நிறைவடைந்துள்ளதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.

மதுரை: காரைக்குடி மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கட்சி மற்றும் தனியார் நிகழ்வில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா டெல்லியில் இருந்து தனி விமான மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து விமான நிலையம் அருகே உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பாஜக பல்துறை வல்லுநர்கள் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், மாநில பொறுப்பாளர் சிடி ரவி, தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கு பெற்றனர்.

இதில் கலந்து கொண்ட பேசிய ஜே.பி.நட்டா, "தமிழ் நிலம் கலாச்சாரத்தின் நிலம். தேச விடுதலையில் தமிழ் மக்களின் பங்கு அளப்பறியது. கடந்த எட்டு ஆண்டுகளாக மோடி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் காரணமாக இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது.

தமிழ்நாடும் பல்வேறு துறைகளிலும் வளர்ந்து வருகிறது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை நாட்டில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. ஜி.எஸ்.டி அமல்படுத்துவதற்கு பல தடைகள் இருந்து, அது அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன. இதனால் மக்களின் நேரம், உழைப்பு அனைத்தும் சேமிக்கப்பட்டு உள்ளன.

இந்தியாவை ஜி.எஸ்.டிக்கு முன், பின் என இரண்டாக பார்க்கலாம். நாடு முழுவதும் வரி வசூல் அதிகரித்துள்ளது. 35% ஆக இருந்த குறு சிறு நிறுவனங்களின் வரி வசூலும், 38% ஆக அதிகரித்துள்ளது. மேக் இன் இந்தியா திட்டம் மூலம் 85% மக்கள் வளர்ச்சியடைந்துள்ளனர்.

கரோனவுக்கு பின்னர் அனைத்து துறைகளிலும் இந்தியா வளர்ச்சி கண்டுள்ளது. வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களின் நிலை 10% ஆக குறைந்துள்ளது. மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற 550 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

அதற்காக 633.17 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு கேட்ட நிலையில், தமிழ்நாடு அரசு 543 ஏக்கர் நிலத்தை மட்டுமே கொடுத்துள்ளது. இருந்தும் சர்வதேச விமான நிலையத்திற்கான பணிகளை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான பணிகள் 95% நிறைவடைந்து உள்ளன.

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மொத்தம் 1,264 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக தொற்று நோய் பிரிவுக்காக 134 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. 750 படுக்கைகள் மற்றும் ஐ.சி.யூ வசதியுடன் கூடிய 250 படுக்கைகள் அமைக்கப்பட உள்ளன. மாணவர் சேர்க்கை இடங்களும் 100ல் இருந்து 250 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

விரைவில் கட்டுமானம் முடிவு பெற்று அதை மோடி திறந்து வைப்பார். மதுரையில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்க 732 கோடி, மதுரை ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்கு 392 கோடி, மதுரை மல்லிக்கான ஏற்றுமதி நிலை அதிகரிப்பு உள்ளிட்ட பல திட்டங்களை மதுரைக்காக மத்திய அரசு செயல்படுத்தி உள்ளது.

இந்திய பெண்கள் வாழ்க்கையில் பல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கழிப்பறை கட்டும் திட்டத்தின் வாயிலாக 11.88 கோடி பெண்கள் பயனடைந்து உள்ளனர். உஜ்வாலா திட்டத்தின் மூலம் இலவச சிலிண்டர், மகளிர் உதவி குழுக்களுக்கு கடன் போன்ற பல திட்டங்கள் மகளிர் வளர்ச்சிக்கு செயல்படுத்தப்பட்டு உள்ளன.

நாடு முழுவதும் 100% மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மோடி தலைமையிலான பாஜக அரசின் திட்டங்களால் இந்தியா பல துறைகளிலும் சர்வதேச அளவில் முன்னேறி வருகிறது.கரோனா காலத்தை மோடி சிறப்பாக கையாண்டார். அது உலகம் முழுவதும் பரவலான பாராட்டை பெற்றது.

2.5 மாதத்தில் கரோனவை எதிர்கொள்ள தேவையான மருத்துவ கட்டமைப்புகளை ஏற்படுத்தி இந்தியாவை தயாராக்கினார். இதுவரை 217 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இன்று யாரும் முக கவசம் அணியாமல் இருப்பதற்கு காரணம் மோடியின் செயல்பாடுகள்தான்.

ரஷ்யா - உக்ரைன் போர் பாதிப்பில் இருந்து இரண்டு வாரத்தில் இந்திய மாணவர்கள் அனைவரையும் பத்திரமாக நாட்டிற்கு திரும்ப உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மற்ற நாட்டு மாணவர்களும் பத்திரமாக நாடு திரும்ப இந்தியா முயற்சி எடுத்தது. உலகின் பலமிக்க நாடாக, 5 ட்ரில்லியன் பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியாவை மாற்ற உங்கள் ஒத்துழைப்பு மிக அவசியம்" என பேசினார்.

இதையும் படிங்க:எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒரு செங்கல்லை கூட திமுக எடுத்து வைக்கவில்லை - ஆர்.பி.உதயகுமார்

ABOUT THE AUTHOR

...view details