ETV Bharat / state

நாமக்கல் சிக்கன் ரைஸ் விவகாரம்; தாயும் உயிரிழந்த சோகம்! - Chicken Rice issue One more Death

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 3, 2024, 10:37 PM IST

உயிரிழந்த தாய் மற்றும் முதியவர் புகைப்படம்
உயிரிழந்த தாய் மற்றும் முதியவர் புகைப்படம் (Credit to Etv Bharat Tamil Nadu)

Chicken Rice issue One more Death: நாமக்கலில் விஷம் கலந்த சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், தற்போது சிகிச்சை பெற்று வந்த தாயும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நாமக்கல்: நாமக்கல் பேருந்து நிலையம் எதிரில் ஜீவானந்தம் (32) என்பவர் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது ஓட்டலில் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி, நாமக்கல் அருகே உள்ள கொசவம்பட்டியைச் சேர்ந்த தனியார் இன்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பகவதி (20), 7 சிக்கன் ரைஸ் பொட்டலம் வாங்கிக் கொண்டு, வீட்டில் உள்ள தனது தாயார் நதியா (40), இதனைத் தொடர்ந்து, தேவராயபுரத்தில் வசித்து வரும் தாத்தா சண்முகநாதன் (67) வீட்டிற்குச் சென்று, அங்கு தாத்தா சண்முகநாதன் மற்றும் குடும்பத்தினருக்கு கொடுத்து உள்ளார். இதற்கிடையே சிக்கன் ரைஸ் சாப்பிட்ட நதியா, சண்முகநாதன் ஆகியோருக்கு மட்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், மீதமுள்ளவர்கள் சிக்கன் ரைஸ் சாப்பிடவில்லை.

இதையடுத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த நதியா, சண்முகநாதன் ஆகிய இருவரும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, செயற்கை சுவாசம் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தனர் இதனிடையே, சிக்கன் ரைஸ் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உமா போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அவர்களும் சிக்கன் ரைஸ் உணவு மாதிரியை எடுத்து, சேலம் உணவு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பினர். மேலும், கல்லூரி மாணவர் பகவதி மற்றும் ஓட்டல் உரிமையாளர் ஜீவானந்தம் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இதற்கிடையே, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த கூலித்தொழிலாளி சண்முகநாதன், நேற்று இரவு (மே 2) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உணவு மாதிரியின் பகுப்பாய்வு முடிவில், உணவில் விஷம் கலந்து இருப்பதும் உறுதியானது. இதனையடுத்து, போலீசாரின் பார்வை கல்லூரி மாணவர் பகவதி பக்கம் திரும்ப, அவரைப் பிடித்து விசாரணை செய்ததில், அவரது காதல் விவகாரத்தை தாய் மற்றும் குடும்பத்தினர் கண்டித்ததால் உணவில் விஷம் கலந்து கொலை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து, பகவதியைக் கைது செய்த நாமக்கல் போலீசார், கொலை வழக்காக மாற்றி, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், இன்று (மே 3) தாயார் நதியாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிக்கன் ரைஸ் விவகாரத்தில் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தீவட்டிப்பட்டி கலவரம்; பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்! - Deevattipatti Amman Temple Riots

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.