ETV Bharat / state

ஆன்லைன் டிரேடிங்கில் ஏற்பட்ட நஷ்டத்தால் இளைஞர் தற்கொலை? தேனி அருகே பரபரப்பு! - Theni youth suicide

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 3, 2024, 10:40 PM IST

மரணமடைந்த வாலிபரின் புகைப்படம்
மரணமடைந்த வாலிபரின் புகைப்படம் (Credit - ETV Bharat Tamilnadu)

Theni youth suicide: தேனி அருகே ஆன்லைன் டிரேடிங்கில் சுமார் ரூ. 60 லட்சம் இழப்பைச் சந்தித்ததால் இளைஞர் தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேனி: போடிநாயக்கனூர், ரங்கநாதபுரம் பகுதி வஉசி தெருவில் வசித்து வருபவர் தனவந்தன். இவர் போடிநாயக்கனூர் பேருந்து நிலையம் அருகே ஜெராக்ஸ் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவர் கற்பகப்ரியா என்பவரை காதலித்து மணம் முடித்துள்ளார். இவர்களுக்கு குழந்தை பிறந்து இறந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தனவந்தன் ஆன்லைன் டிரேடிங் (Online Trading) வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். நாளடைவில் ஆன்லைன் வர்த்தகத்தில் முழுக்க முழுக்க மோகம் கொண்டு, அதிலேயே மூழ்கி இருந்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, நஷ்டம் ஏற்பட்டதை அடுத்து, பலரிடம் லட்சக்கணக்கில் கடன் வாங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சுமார் 60 லட்சத்திற்கு மேல் ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை இழந்து விரக்தி அடைந்த தனவந்தன், கடந்த சில மாதங்களாகக் கடுமையான மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், இரண்டு முறை இவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளதும் தெரியவந்துள்ளது.

இதனிடையே, தனவந்தனின் குடும்பத்தினர் விசுவாசபுரம் பகுதியில் உள்ள கோயிலுக்கு சென்றுள்ளனர். அப்போது, வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தனவந்தன் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கோயிலுக்கு வீடு திரும்பிய உறவினர்கள் நீண்ட நேரம் கதவைத் தட்டியும் திறக்காததால், சந்தேகம் அடைந்த உறவினர்கள் வீட்டின் உள்ளே பார்த்த பொது தனவந்தன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து போடிநாயக்கனூர் தாலுகா காவல் துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தற்கொலை செய்து கொண்ட தனவந்தன் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காகத் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலையைக் கைவிடுக: சொந்தக் காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் மாநில தற்கொலை தடுப்பு உதவி எண் 104 என்கிற எண்ணுக்கு அழையுங்கள் அல்லது சிநேகா உதவி எண்ணுக்கு (044-24640050) அழையுங்கள். மேலும், இணைய வழித் தொடர்புக்கு (022-25521111) என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.

மேலும், மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள help@snehaindia.org எனும் மின்னஞ்சல் முகவரியிலும், நேரில் தொடர்புகொள்ள சிநேகா பவுண்டேஷன் ட்ரஸ்ட், பூங்கா சாலை (பார்க் வியூ ரோடு), ஆர்.ஏ.புரம் சென்னை - 600028 என்கிற முகவரிக்கு நேரில் சென்று தொடர்பு கொள்ளலாம்.

இதையும் படிங்க: ஊட்டி மலைப்பாதையில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து; 20க்கும் மேற்பட்டோர் காயம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.