தமிழ்நாடு

tamil nadu

"2022-ல் ஐஐடி, என்ஐடிகளில் 16 மாணவர்கள் தற்கொலை" - மத்திய இணை அமைச்சர் தகவல்!

By

Published : Mar 15, 2023, 5:26 PM IST

student
student

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2022-ல், ஐஐடி, என்ஐடி, ஐஐஎம் போன்ற மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் தற்கொலைகள் மீண்டும் அதிகரித்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். 2019 மற்றும் 2022ஆம் ஆண்டில் 19 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி:நாடு முழுவதும் உள்ள ஐஐடி, என்ஐடி, ஐஐஎம் போன்ற மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. குறிப்பாக சென்னை ஐஐடியில் கடந்த சில ஆண்டுகளாக மாணவர்களின் தற்கொலைகள் அதிகரித்துள்ளன.

சென்னை ஐஐடியில் கடந்த ஆறு ஆண்டுகளில் சுமார் 11 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஸ்டீபன் சன்னி ஆல்பர்ட் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார். அதேபோல் ஆந்திராவைச் சேர்ந்த பிடெக் மாணவர் புஷ்பக் ஸ்ரீசாய் நேற்று (மார்ச்.14) தற்கொலை செய்து கொண்டார். மாணவர்களின் தொடர் தற்கொலைகள் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் தற்கொலைகள் அதிகரித்துள்ளதாக மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்கார் தெரிவித்துள்ளார். இன்று(மார்ச்.15) நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஐஐடி மாணவர்கள் தற்கொலைகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

அதில், "இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2022ஆம் ஆண்டில் மாணவர்கள் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டில் மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் மொத்தம் 19 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இவர்களில் எட்டு பேர் ஐஐடி மாணவர்கள், ஏழு பேர் என்ஐடி மாணவர்கள், ஒருவர் ஐஐஎம் மாணவர்.

கடந்த 2020ஆம் ஆண்டில் 5 தற்கொலைகள் மட்டுமே நடந்துள்ளன. அதேபோல் 2021ஆம் ஆண்டில் 7 தற்கொலைகள் நடந்துள்ளன. 2020, 2021ஆம் ஆண்டுகளில் கொரோனா பெருந்தொற்று காரணமாக நேரடி வகுப்புகள் நடக்காமல், ஆன்லைன் வகுப்புகள் நடந்ததால் தற்கொலைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

2022ஆம் ஆண்டில் மத்திய அரசின் இந்த முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் தற்கொலைகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. கல்வி சார்ந்த மன அழுத்தம், குடும்பப் பிரச்சினைகள், மனநலப் பிரச்சினைகள் உள்ளிட்ட காரணங்களால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

இதுபோன்ற தற்கொலை சம்பவங்களை கருத்தில் கொண்டு, கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் மன அழுத்தம், உளவியல் சிக்கல்களைப் போக்குவதற்காக கவுன்சிலிங் வழங்குவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் மொழித்தடைகளை நீக்கவும், தொழில்நுட்ப புத்தகங்கள் 12 பிராந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட தேசிய தற்கொலைத் தடுப்பு உத்தியை கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு விநியோகித்துள்ளது. மாணவர்களின் கல்வி சார்ந்த மன அழுத்தத்தைக் குறைக்க மத்திய கல்வி அமைச்சகம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் ஆரோக்கியம் குறித்த கருத்தரங்குகள், யோகா அமர்வுகள், விளையாட்டு - கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடத்தப்படுகின்றன. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண அரசும், கல்வி நிறுவனங்களும் இணைந்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னை ஐஐடியில் ஆந்திர மாணவர் தற்கொலை - தொடரும் தற்கொலைகள் குறித்து போலீஸ் விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details