92,000 பேப்பர் கப் மூலம் பிரமாண்ட தேசியக்கொடி!

By

Published : Mar 5, 2023, 5:53 PM IST

thumbnail

திருச்சி காஜாமலை அல்-ஜமீ அத்துஸ் சாதிக் மெட்ரிக் பள்ளியில் நாட்டின் 75வது சுதந்திர ஆண்டினைக் கொண்டாடும் விதமாகவும், மாணவ - மாணவிகளின் கல்வி மற்றும் தனித் திறமைகளை நிரூபிக்கும் விதமாகவும், பள்ளியின் 30ஆம் ஆண்டு விழாவினை கொண்டாடும் வகையிலும் மிகவும் பிரமாண்டமான ஓர் உலக சாதனையை படைத்துள்ளனர். 

அதன்படி, ‘காகிதக்கோப்பைகளால் உருவாக்கப்படும் உலகின் மிகப்பெரிய தேசியக் கொடி குழு’ (The Largest National Flag Made with Paper Cups by a Team) இது என்பதே ஆகும். அதாவது, இந்த பள்ளியில் பயிலும் 340 மாணவ, மாணவிகள், 22 ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர் மற்றும் இதரப் பள்ளி மாணவர்கள் பங்களிப்புடன் இந்த சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதனை ஒட்டி இன்று (மார்ச் 5) காலை முதலே பேப்பர் கப்பில் வண்ணங்களைத் தீட்டிய பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள், அந்த பேப்பர் கப்பினை அடுக்கி வைத்து தேசியக்கொடியை தயார் செய்தனர். இவ்வாறு பேப்பர் கப்பினால் வடிவமைக்கப்பட்ட இந்த தேசியக்கொடி 22.5 மீட்டர் நீளமும், 15 மீட்டர் அகலமும் மற்றும் 337.5 சதுர மீட்டர் பரப்பளவிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக கடந்த 2009ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி மலேசியாவில் இதே போன்று 124 மீட்டர் சதுர பரப்பளவில் உலக சாதனை நிகழ்த்தினர். ஆனால், திருச்சி பள்ளி மாணவர்கள் 337.5 சதுர மீட்டரில் பேப்பர் கப் மூலம் தேசியக்கொடியை வடிவமைத்து அந்த சாதனையை முறியடித்துள்ளனர். 

இந்த மாபெரும் உலக சாதனை நிகழ்வினை எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி ஆகிய 2 உலக சாதனை நிறுவனங்களின் ஆய்வாளர்கள் நேரில் வந்து ஆய்வு செய்து சான்றிதழ் அளித்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் தாளாளர் முகமது ஆரிப், செயலாளர் அஹமதுல்லாஹ், முதல்வர் ஜோஷ்பின் ஸ்டெல்லா ஆகியோர் செய்திருந்தனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.