மின் கம்பிகளை அறுத்துக்கொண்டு விழுந்த மரக்கிளை.. பரபரப்பான சிசிடிவி காட்சிகள்! - CCTV footage of tree branch falling
Published : May 14, 2024, 9:24 PM IST
கோயம்புத்தூர்: கோவை மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வரும் நிலையில், ஓரிரு இடங்களில் கோடை மழை பெய்ததால், சற்று குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், நேற்று (மே 13) கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான பொகலூர், கரியாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதல் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.
இதனால் அன்னூர் சத்தி சாலையில் உள்ள டீக்கடை ஒன்றின் முன்னால் இருந்த மரத்தின் கிளை, திடீரென முறிந்து சாலையில் விழுந்தது. விழும் போது அங்கிருந்த மின் கம்பிகளையும் அறுத்துக் கொண்டு விழுந்துள்ளது. இச்சம்பவத்தின் போது அங்கு யாரும் இல்லாததால், நல்வாய்ப்பாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
பின்னர், இது குறித்து உள்ளாட்சி நிர்வாக ஊழியர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, அங்கு வந்த ஊழியர்கள் மரத்தின் கிளையை வெட்டி அப்புறப்படுத்தினர். இந்த நிலையில், டீக்கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் மரத்தின் கிளை முறிந்து விழும் சிசிடிவி காட்சிகள் பதிவாகி, தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.