இரண்டு நாட்களிலேயே கையோடு பெயர்ந்து வரும் தார் சாலை.. திடீர் தர்ணாவில் இறங்கிய நகர்மன்ற உறுப்பினர்கள்! - Poor road construction in sirkali

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 14, 2024, 9:58 PM IST

thumbnail
தரமற்ற முறையில் போடப்பட்ட சாலையை கண்டித்து நகர்மன்ற உறுப்பினர்கள் தர்ணா (Video credit - ETV Bharat Tamil Nadu)

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகராட்சிக்குட்பட்ட 17வது வார்டில் நகராட்சியின் செயலற்ற கணக்கு நிதி திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில், கீழ் சன்சிட்டி நகர் பகுதியில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணி இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே, புதிதாக அமைக்கப்படும் தார் சாலை தரமற்ற முறையில் அமைக்கப்படுவதாகவும், சாலையின் திட்ட மதிப்பீடு மற்றும் ஒப்பந்ததாரர் பெயர் உள்ளிட்ட விவரங்கள் குறித்த அறிவிப்பு பலகை ஏதும் அப்பகுதியில் வைக்கப்படவில்லை என குற்றம் சாட்டி, அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள், திமுக நகர்மன்ற உறுப்பினர்களின் கணவர்கள் மற்றும் முன்னாள் திமுக நகர்மன்ற உறுப்பினர் ஆகியோர் பணிகளை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பணிகளை தரமாக மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் மூலம் உத்தரவாதம் அளித்தால் மட்டுமே பணிகளைத் தொடர்ந்து செய்திட வேண்டும் எனக் கூறி, சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வாகனங்களுக்கு முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

குறிப்பாக, நகர் மன்றத்தில் தீர்மானம் வைக்காமல் இந்த சாலை அமைக்கப்படுவதாகவும், நகரின் பல்வேறு வார்டுகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சேதம் அடைந்த சாலைகள் இருக்கும் போதிலும், வீட்டு வரியே இல்லாத இந்த பகுதியில் சாலை அமைக்கப்படுவது குறித்து நகர்மன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.