தஞ்சை பெரிய கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.32.5 லட்சம் வசூல்!
Published : Jan 9, 2024, 2:20 PM IST
தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனாகிய பெருவுடையார் ஆலயம் உலகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இது தமிழர்களின் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது. இக்கோயிலுக்கு உள்ளூர், வெளியூர் பக்தர்கள் மட்டும் இன்றி வெளி மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் அதிகளவில் வருகை புரிகின்றனர்.
மேலும் உலகப் புகழ்பெற்ற இக்கோயிலின் கட்டடக்கலையை பார்வையிடுவதற்காக, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இவ்வாறு இக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக, கோயில் சன்னதிகளில் 11 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல்கள் மாதந்தோறும் உயர் அதிகாரிகள் முன்னிலையில் திறந்து எண்ணப்படுவது வழக்கம்.
அந்த வகையில், இரண்டு மாதங்களுக்குப் பிறகு நேற்று (ஜன.8 ) உண்டியல் திறக்கப்பட்டது. இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர்கள் கவிதா, சுப்பிரமணியன், செயல் அலுவலர் மாதவன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற பணியில் அதிகாரிகள், வங்கி ஊழியர்கள், கோயில் பணியாளர்கள், பக்தர்கள், பொதுமக்கள், வார வழிபாட்டுக் குழுவினர்கள் கலந்து கொண்டு, உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இந்த உண்டியல்களில் மொத்தம் 32 லட்சத்து 52 ஆயிரத்து 735 ரூபாய் மற்றும் வெளிநாட்டு நோட்டுகள் 113 கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.