Palani Kumbabishekam and Thaipusam - ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து தரிசனம்
Palani Kumbabishekam and Thaipusam : திண்டுக்கல்: அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு வருகின்ற ஜனவரி 27ஆம் தேதி கும்பாபிஷேக திருவிழா நடைபெறுகிறது. இதனையொட்டி தற்போதிருந்தே பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருந்து பாதயாத்திரையாக கோயிலுக்கு வருகை தந்து கொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் பக்தர்கள் கிரிவலப் பாதையில் அலகு குத்தியும், காவடிகள் எடுத்து ஆடியும், அரோகரா கோசங்கள் இட்டும், பக்தி பாடல்களை பாடியும், நீண்ட தூரத்தில் இருந்து வரும் பக்தர்கள் தங்களது களைப்பு தெரியாமல் இருக்க கோலாட்டம் ஆடியும் வருகின்றனர்.
மேலும் குழந்தை வரம் வேண்டி முருகப்பெருமானிடம் முறையிட்ட தம்பதியினர் குழந்தை பிறந்தவுடன் கரும்புத் தொட்டிலில் குழந்தையை படுக்க வைத்து தங்களது தோளில் சுமந்து கிரிவலப் பாதையில் வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். கும்பாபிஷேக பணிகளுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.