ஆளுநர் தேநீர் விருந்து புறக்கணிப்பு; தமிழ்நாட்டிற்கு அழகல்ல - சசிகலா
தஞ்சாவூர்: முள்ளிவாய்க்கால் முற்றத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் (Tamil War Martyrs Memorial Day) செலுத்தும் நிகழ்ச்சி இன்று (ஜன.25) நடைபெற்றது. இதில், வி.கே.சசிகலா கலந்துகொண்டு உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகள் உருவப்படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், ’தமிழுக்காக தமிழினம் என்கிற காரணத்திற்காக நாடு வேறு, இடம் வேறு என்ற கணக்கு இல்லை. தமிழர் என்ற ஒன்றுதான், ஒற்றுமையைக் குறிக்கும். அந்த வகையில் உயிர் நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. வரும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தாக்கத்தை ஏற்படுத்தும்’ என்றார்.
மேலும், ஆளுநர் தேநீர் விருந்தை காங்கிரஸ் உள்ளிட்டக் கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்த தகவல் குறித்த கேள்விக்குப் பதில் அளித்த அவர், 'தமிழ்நாட்டின் விருந்தோம்பல் முறையினை எப்போதும் கொண்டாடும் மக்கள் தமிழ் மக்கள்; அதை தவிர்ப்பது என்பது தமிழ்நாட்டிற்கு அழகல்ல' என்றும் கூறினார்.