சபரிமலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பக்தர்களின் கூட்டம்: கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிவரும் கோயில் நிர்வாகம்!
Published : Dec 24, 2023, 7:19 PM IST
தேனி: மண்டல பூஜையையடுத்து கடந்த நவம்பர் மாதம் 16ஆம் தேதி கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டது. இதனையடுத்து, ஐயப்பன் கோயிலில் பக்தர்களின் கூட்டம் முதல் நாளிலிருந்து அலைமோதுகின்றது. ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு ஐயப்பனைத் தரிசிக்கப் பக்தர்கள் தொடர்ந்து சபரிமலைக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் வசதிகளுக்காகக் கோயில் தரப்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், ஐயப்பனைத் தரிசிக்க ஆன்லைன் மூலம் ஸ்பாட் புக்கிங் முறை அறிமுகப்படுத்தப்பட்டுப் பின்பற்ற வந்தது. இந்நிலையில், நேற்று (டிச.23) ஒரே நாளில் 97ஆயிரத்து 287 பக்தர்கள் ஐயப்பனைத் தரிசிக்கச் சபரிமலைக்கு வருகை தந்துள்ளதாகக் கோயில் நிர்வாக தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் பம்பையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது போக்குவரத்துத் துறை. இந்நிலையில், மண்டல பூஜை அன்று ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வர வாய்ப்புள்ளதாகவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருவதனால், கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் கோயில் நிர்வாகம் திணறி வருகின்றனர்.