கண்ணோடு கண் நோக்கி.. ஓர் காந்த பரிமாற்றம்.. திருப்பூரில் நடந்த 'மனைவி நல வேட்பு நாள்' விழா!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 30, 2023, 10:51 PM IST

thumbnail

திருப்பூர்: வேதாத்திரி மகரிஷியின், அம்மன் நகர் மனவளமாக்கலை மன்றம் சார்பில் பலவஞ்சிபாளையம் செல்லும் வழியில் உள்ள அம்மன் நகர் மன்றத்தில் இன்று (ஆக.30) பெண்களின் பெருமையைப் போற்றும் விதத்தில், இந்தாண்டுக்கான மனைவி நல வேட்பு நாள் விழா கொண்டாடப்பட்டது. 

மனைவியைக் கவுரவிக்கும் விதமாக, மனைவிக்கு கணவன் மலர் கொடுத்தும், மனைவி கணவருக்குக் கனி கொடுத்தும், தம்பதியினர் ஒருவருக்கொருவர் கரங்களைப் பற்றி, கண்ணோடு கண் நோக்கி காந்த பார்வையைப் பரிமாறிக் கொண்டனர்.

மேலும், வழக்கமாக அன்னையர், தந்தையர், ஆசிரியர், குழந்தைகள், காதலர், முதியோர், மாற்றுத்திறனாளிகள் என அவர்களைக் கவுரவிக்க பல்வேறு தினங்கள் கொண்டாடப்படுகிறது. கணவன்கள் நலமுடன் வாழப் பெண்கள் சுமங்கலி பூஜை நடத்துகின்றனர். அந்த வகையில் கணவன் மனைவி உறவு மேம்படும் நோக்கில் மனைவி நல வேட்பு நாள் கொண்டாடப்படுவதாகத் தெரிவித்தனர்.

விழாவில் புதிதாகத் திருமணமான இளம் ஜோடிகள் முதல் முதிய தம்பதியினர் என 100க்கும் மேற்பட்ட தம்பதியினர் கலந்து கொண்டு ஜோடியாக அமர்ந்து கணவர்கள் மனைவிகளுக்கு மரியாதை செய்தனர். விழாவைத் தலைவர் அன்பு பாலு என்ற பாலசுப்பிரமணியம் ரத்தினம்பாள் தம்பதியினர் கொடியேற்றி வைத்துத் தொடங்கிவைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.