சாலையில் மயங்கி கிடந்த சிறுத்தை!முதலுதவி அளிக்காமல் வீடியோ எடுத்த பொதுமக்கள்
நீலகிரி: குன்னூர் பகுதி அடர்ந்த வனங்கள் சூழ்ந்த பகுதியாகும். அப்பகுதியில் காட்டெருமை, யானை, சிறுத்தை புலி, கரடி போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இவைகள் உணவு மற்றும் குடிநீருக்காக அவ்வப்போது குடியிருப்புப் பகுதியில் உலா வருகிறது. மேலும், குன்னூர் பகுதியில் இரவு நேரங்களில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது.
சிறுத்தைகள் குறிப்பாக வீட்டில் வளர்ப்பு நாய்களை சர்வ சாதாரணமாக வேட்டையாடிச் செல்லும் காட்சிகளும் சிசிடிவி கேமராவில் பதிவாகி அவ்வூர் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், நேற்று(ஜூன் 25) இரவு குன்னூர் அருவங்காடு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சிறுத்தைக் குட்டி ஒன்று வாகனம் மோதி உயிருக்குப் போராடிய நிலையில் சாலையில் கிடந்துள்ளது. அடிபட்ட சிறுத்தை சிறிது நேரம் சாலையில் மயங்கிக் கிடந்தது. இதனை அடுத்து தானாகவே எழுந்து அருகில் உள்ள புதருக்குள் சென்று மறைந்தது.
மேலும், காயம் அடைந்த சிறுத்தைக் குட்டியை வனத்துறையினர் கண்டறிந்து முறையாக சிகிச்சை வழங்கப்பட வேண்டும் எனவும்; சிறுத்தையின் மீது வாகனம் மோதி விட்டுச் சென்றவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பொதுமக்கள் காயம் அடைந்த சிறுத்தைக்கு உதவி புரியாமல் அனைவரும் தங்களது செல்போனில் படம் பிடித்த காட்சி வேதனை அளிப்பதாக இருந்தது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
இதையும் காண்க: முதலை கடித்ததில் மீனவர் படுகாயம்..மருத்துவமனையில் அனுமதி!