நூற்றாண்டுகள் கடந்த ஆலமரத்து ஈஸ்வரன் திருக்கோயில் குடமுழுக்கு திருவிழா: ஏராளமானோர் பங்கேற்று சாமி தரிசனம்
தேனி: கம்பம் அருகே நூற்றாண்டைக் கடந்த ஆல மரத்து ஈஸ்வரன் திருக்கோயிலில் அஷ்டபந்தன மகா குடமுழுக்கு விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகளுடன் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மேலும் விழாவின் ஒரு பகுதியாக ஆல மரத்திற்குப் பூரண கும்ப மரியாதை செலுத்தப்பட்டு, ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தேனி மாவட்டம், கம்பம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் குள்ளப்பகவுண்டன்பட்டியில் பல நூற்றாண்டுகள் கடந்த ஆலமரத்து ஈஸ்வரன் திருக்கோயில் அமைந்துள்ளது. நூற்றாண்டுகள் கடந்த இந்த திருக்கோயிலில் குடமுழுக்கு விழா ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
குடமுழுக்கு விழாவினை முன்னிட்டு கோவில் வளாகத்தில் யாக சாலைகள் அமைத்து வேதாச்சாரியார்கள் சிறப்பு அபிஷேக ஆராதனைகளை செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து சுவாமி ஈஸ்வரன் பீடத்தில் விசேஷ பூஜைகளும் நடத்தப்பட்டன. பின்னர் புனித நீர் அடங்கிய கலச நீரை வேதாச்சாரியார்கள் தலையில் சுமந்து கொண்டு, ஆல மரத்தை கும்பமாக பாவித்து, அதற்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்ததுடன் பூரண கும்ப மரியாதையையும் செய்து, தலையில் சுமந்து வரப்பட்ட புனித நீரை ஊற்றி இறைவழிபாட்டினை நடத்தினார்கள்.
விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு புனித நீர் தெளித்து அன்னதானத்தை பிரசாதமாக வழங்கினார்கள். பின்னர் ஆலய மூலவரான லிங்க வடிவில் காட்சியளிக்கும் சிவனுக்கு தீபாராதனைகள் காட்டப்பட்டன. குடமுழுக்கு விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்குபெற்று சிவனை தரிசித்தனர். அப்பகுதியைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள், இந்த குடமுழுக்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: ஆனி வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு நாதன்கோவில் ஜெகநாதப் பெருமாள் கோயிலில் சிறப்பு அபிஷேகம்