2வது நாளாக பாலவாக்கத்தில் விநாயகர் சிலைகள் கரைப்பு! 516 விநாயகர் சிலைகள் விஜர்சனம்.. போலீசார் பலத்த பாதுகாப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 25, 2023, 10:12 AM IST

thumbnail

சென்னை: பாலவாக்கத்தில் நேற்று (செப். 24) 2வது நாளாக 516 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு பாதுகாப்பாக கடலில் கரைக்கப்பட்டன.

இந்தியா முழுவதும் கடந்த 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன்படி சென்னையில் பொது இடங்களில் 1,500க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. தற்போது விநாயகர் சதுர்த்தி பண்டிகை முடிந்த நிலையில் சிலையை கரைக்கும் பணி தொடங்கி உள்ளது.

சென்னையை பொறுத்த வரையில், கடலில் 4 இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க இரண்டு நாட்கள் அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், முதல் நாளில் பாலவாக்கம் பல்கலை நகர் கடற்கரையில், 74 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.

அதனைத்தொடர்ந்து, நேற்று (செப். 24) 2வது நாளில், காலை முதல் மாலை 7.33 வரை 516 விநாயகர் சிலைகள் சென்னை, ஆவடி, தாம்பரம் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது. விநாயகர் சிலை ஊர்வலத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தவிர்க்க 400க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும், விநாயகர் சிலை கரைப்பு பகுதிகளில் விபத்துகளை தடுக்க தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டன. விநாயகர் சிலைகளை கடலில் கரைக்கும் வகையில் ட்ராலியும், பிரம்மாண்ட சிலைகளை தூக்கி சென்று கரைக்க கிரேன் வசதியும் செய்யப்பட்டு இருந்தது. இது தவிர சிலைகள் கரைக்கப்படும் கடற்கரை பகுதியில் அவசர உதவிக்கு தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள், படகுகள், நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தனர்.

பாலவாக்கம் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து கொண்டு செல்லப்பட்ட விநாயகர் சிலைகள் அனைத்தும் பாதுகாப்பான முறையில் கடலில் கரைக்கப்பட்டது. விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டதால் கடற்கரையில் சிலைகளின் கழிவுகள் தேங்கி நிற்பதாக சுற்றுச்சுழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.  

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.