தவணை கட்ட தாமதமானதால் தாக்குதல்?.. ஏஜென்ட் அடித்ததில் காது ஜவ்வு கிழிந்ததாக புகார் - வீடியோ வெளியாகி பரபரப்பு! - Finance agent attack a businessman
Published : May 16, 2024, 9:08 AM IST
சென்னை: சென்னை சோலையூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 43), இவர் எர்த் மூவர்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் ஆனந்தன் தாம்பரத்தில் உள்ள சோழமண்டலம் பைனான்சில் லோன் பெற்று கார் வாங்கியதாக கூறப்படுகிறது. இதில் ஒரு மாத தவணை கட்டவில்லை என வீட்டிற்கு வந்த பைனான்ஸ் நிறுவன ஊழியர் ஆனந்தனை தாக்கியுள்ளார். அந்த தாக்குதலில் ஆனந்தனின் காது ஜவ்வு கிழிந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் இதுகுறித்து ஆனந்தன் சோலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து ஆனந்தனுக்கு ஆதரவாக தமிழ்நாடு கட்டுமான இயந்திர உரிமையாளர்கள் சங்கத்தினர் தாம்பரத்தில் உள்ள சோழமண்டலம் பைனான்ஸ் நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து, சம்பவம் குறித்து தகவல் அறிந்த வந்த தாம்பரம் காவல் நிலைய போலீசார், முற்றுகையில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் வந்து பேசிக் கொள்ளும்படி கூறி அவர்களை அங்கிருந்து கலையச் செய்தனர். இந்நிலையில், தனியார் பைனாஸ் ஊழியர் ஆனந்தனை தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.