கருங்கல்பாளையம் சின்னமாரியம்மன் கோயில் திருவிழா.... பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 4, 2023, 5:52 PM IST

thumbnail

ஈரோடு: பிரசித்தி பெற்ற கருங்கல்பாளையம் சின்னமாரியம்மன் கோயில் திருவிழா கடந்த 21ஆம் தேதி செவ்வாய் கிழமை பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து கம்பம் நடுதல், பூவோடு எடுத்தல் போன்ற பல்வேறு நிகழ்ச்சி பொதுமக்கள் ஆரவாரத்துடன் வெகு விமரிசையாக நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்குதல் மற்றும் தேர் திருவிழா நடைபெற்றது. பூக்குழி திருவிழாவிற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்புகட்டி, விரதமிருந்து நேர்த்திக்கடனை பூர்த்தி செய்தனர். பூக்குழி திருவிழாவிற்குத் தேவையான விரகுகளை கோயிலுக்கு காணிக்கையாக பொதுமக்கள் வழங்கினர்.

இதையடுத்து, பூக்குழிக்காக பற்றவைக்கப்பட்ட நிலையில், அதிகாலை வரையில் பூக்குழி இறங்குவதற்கு ஏதுவாக தயார் செய்யப்பட்டது. முன்னதாக காலையில் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கோயிலின் தலைமை பூசாரி பிரகாஷ் அம்மனை வழிபட்டு முதலில் பூக்குழி இறங்க, அதனைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்கி அவர்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

தேர்த் திருவிழா மற்றும் கோயில் கரக்கம் நிகழ்ச்சியைத் தொடர்ந்து, பொங்கல் மற்றும் மாவிளக்கு எடுத்தல், கம்பம் எடுத்தல் நிகழ்ச்சியும் இன்று(டிச.4) நடைபெற  உள்ளது. சின்ன மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழாவை முன்னிட்டு சின்ன மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.