“கண்ணா நீ தூங்கடா.. என் கண்ணா நீ தூங்கடா..” குட்டியுடன் ஹாயாக ஓய்வெடுக்கும் யானைக் குடும்பம்! - elephants sleeping video
Published : May 16, 2024, 9:10 PM IST
நீலகிரி: பொள்ளாச்சியில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் குட்டியுடன் யானைகள் படுத்து ஓய்வெடுக்கும் காட்சிகளை, தமிழக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான யானைகள், புலிகள் உள்ளிட்ட வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. வனவிலங்குகளின் நடமாட்டத்தையும், அதன் பாதுகாப்பையும், அவ்வப்போது வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். அப்படி எடுக்கப்பட்ட வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது.
அதில், ஒரு குட்டியுடன் மூன்று யானைகள் அழகாக படுத்து உறங்குகின்றன. ஓய்வெடுக்கும் யானை குடும்பத்திற்கு பாதுகாப்பாக, ஒரு யானை காவல் காத்து நின்று கொண்டிருக்கிறது. இந்த காட்சிகளை வனத்துறை முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாகு, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குட்டியின் பாதுகாப்பையும், குடும்பமாக யானைக்கூட்டம் பாதுகாப்பாக ஓய்வு எடுப்பதை சுட்டிக்காட்டி, நமது குடும்ப சூழல் இதனை வெளிப்படுத்துவதாக அவர் பதிவிட்டுள்ளார்.