2 மாதங்களாக அட்டகாசம் செய்த கரடி! 15 நாட்களுக்கு பின் கூண்டில் சிக்கியது..

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 22, 2023, 6:17 PM IST

thumbnail

நீலகிரி:  குன்னூர் அருகே உள்ள சேலாஸ் மற்றும் மேல் பாரதிநகர் இரட்டை வீடு பகுதிகளில் கடந்த இரண்டு மாதத்திற்கு மேல் கரடி ஒன்று பகல் மற்றும் இரவு வேளைகளில் சுற்றித் திரிந்து வந்தது. மேலும், இரவு வேளைகளில் பாரதி நகர் குடியிருப்பு பகுதியில் பல வீடுகளின் கதவுகளை உடைத்து அட்டகாசம் செய்து வந்தது.

இந்நிலையில் ஊர் பொதுமக்கள் வனத்துறை இடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் கடந்த ஜூலை 31ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அம்ரித்திடம் கரடியை கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என்று மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் கௌதம் சென்னையில் உள்ள முதன்மை தலைமை வன பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின பாதுகாவலர் ஆகியோரிடம் கரடியை கூண்டு வைத்து பிடிக்க அனுமதி கோரி கடிதம் அனுப்பி அனுமதி பெற்ற பின் கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி மேல் பாரதி நகர் பகுதியில் அட்டகாசம் செய்து வந்த கரடியை பிடிக்க கூண்டு வைத்தனர்.

இந்நிலையில் 15 நாட்கள் நிறைவடையும் நிலையில் இன்று (ஆகஸ்ட் 22) அதிகாலை கரடி வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. இதனைத் தொடர்ந்து பிடிபட்ட கரடியினை முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் விட்டனர். மேலும் பிடிபட்ட கரடியை அதிகாலை வேளையில் காண வந்த அப்பகுதி பகுதி பொதுமக்கள் மீண்டும் ஒரு கரடியினை நேரில் கண்டதால் வனத்துறையினரிடம் மீண்டும் கூண்டை இதே பகுதியில் வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.