ETV Bharat / state

38 கிலோ சிக்கனை ஃபிரிட்ஜில் பதப்படுத்தி வைத்திருந்த உணவகத்தின் உரிமம் ரத்து; தூத்துக்குடியில் அதிகாரிகள் அதிரடி! - Food safety department thoothukudi

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 16, 2024, 11:49 AM IST

Hotel license cancelled in thoothukudi: தூத்துக்குடியில் பிரபல பிரியாணி கடையில் 38 கிலோ பழைய சிக்கன், 6 கிலோ எண்ணெய் கத்திரிக்காய் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து அழித்த உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள்,அந்த கடையின் உணவு பாதுகாப்பு உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

preserved foods photo
பதப்படுத்தி வைக்கப்பட்ட உணவுகளின் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையின் கீழ், உணவு பாதுகாப்பு அலுவலர் காளிமுத்து ஆகியோர் அடங்கிய குழுவானது தூத்துக்குடி மாநகராட்சியில், எட்டயபுரம் சாலையில் உள்ள பிரபல அசைவ ஹோட்டலில் நேற்று (மே 15) திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அந்த ஆய்வின்போது, நேற்று முன்தினம் சமைத்து விற்பனையாகாமல் மீதமாகி, ஃபிரிட்ஜில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 2.3 கிலோ சிக்கன், 3 கிலோ மட்டன், 1.6 கிலோ மீன் வகைகள், 3 கிலோ சோறு, 6 கிலோ எண்ணெய் கத்திரிக்காய், 2.7 கிலோ பிரட் ஹல்வா, 2.3 கிலோ நூடுல்ஸ், 15 கிலோ சப்பாத்தி மற்றும் பரோட்டா மாவு, தேதி குறிப்பிடப்படாமல் முன் தயாரிப்பு செய்து ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த 3 கிலோ சிக்கன், காலாவதி தேதி குறிப்பிடப்படாத 2 கிலோ அரசி மாவு, காலாவதியான 3 லிட்டர் சோயா சாஸ் ஆகியவை கண்டறியப்பட்டன. உடனே அவை பறிமுதல் செய்யப்பட்டு மாநகராட்சி குப்பைத் தொட்டியில் கொட்டி அழிக்கப்பட்டன.

மேலும், உணவகத்தின் சமையலறை தூய்மையற்றும், சிலந்தி வலைகளுடன் காணப்பட்டதுடன், தண்ணீர் பகுப்பாய்வு அறிக்கை, பணியாளர்களுக்குத் தொற்றுநோய்த் தாக்கமற்றவர்கள் என்ற சான்றிதழ், இருப்பு பதிவேடுகள் இல்லாமலும், சமையலறை நுழைவு வாயிலில் சிமெண்ட் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டும் இருந்தன. மேலும், அங்கு ரெஸ்டாரண்ட் வகைக்கான உணவு பாதுகாப்பு உரிமம் பெறாமல், ரெஸ்டாரண்ட் தொழில் நடத்தி வருவதும் உறுதியானது.

இதையடுத்து 'ஹனிஃபா பிரியாணி' என்ற பெயரில் ஃப்ரான்சைஸ் எடுத்து, லிவிங்ஸ்டா என்பவருக்குச் சொந்தமான மேற்படி கடையின் உணவு பாதுகாப்பு உரிமத்தினை தற்காலிகமாக ரத்து செய்ய தீர்மானித்து அதற்கான உத்தரவை அதிகாரிகள் வழங்கினர். அடுத்த அறிவிப்பு வரும்வரை உணவகத்தை இயக்கினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் 1,320 கிலோ பீடி இலைகள் பறிமுதல்! - Beedi Leaves Smuggling

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.