Python caught: 100 நாள் வேலை பணியாளர்களை மிரட்டிய 7 அடி மலைப்பாம்பு..
Published : Oct 5, 2023, 8:20 PM IST
திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அருகே 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் வேலை செய்த இடத்தில், 7 அடி அளவிலான மலைப்பாம்பு வந்ததால் பணியாளர்கள் அலறியடித்து ஓடினர். திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த சுண்ணாம்பு குட்டை பகுதியில், இன்று (அக்.05) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், 100 நாள் வேலை திட்டப் பணியாளர்கள் வழக்கம் போல் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது பணியாளர்கள், ஆற்றின் ஓரத்தில் இருந்த புதர்களை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, ஏழு அடி அளவிலான மலைப்பாம்பு திடீரென சீறி உள்ளது. இதைக் கண்ட அப்பணியாளர்கள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு ஓடியுள்ளனர். இதனைத்தொடர்ந்து, அமுதா நாட்றம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
பின்னர், நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள், 7 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை பத்திரமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் அப்பாம்பை வனத்துறையினர் கொண்டுபோய் விட்டனர்.
இதையும் படிங்க: தொடர் சரிவை சந்தித்து வந்த தங்கம்; 14 நாட்களுக்குப் பிறகு திடீர் உயர்வு!