முதலமைச்சரின் உத்தரவு.. ஆழியாறு ஆற்றில் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி தீவிரம்! - CM order to clear Aagaya thamarai
Published : May 18, 2024, 10:34 PM IST
கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பேரூராட்சி மற்றும் 19 ஊராட்சிகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆழியார் ஆற்றின் நீர் பிரதான குடிநீராக விளங்கி வருகிறது. ஆழியார் ஆற்றில் தற்போது அதிக அளவில் ஆகாயத்தாமரைகள் இருப்பதால், நீர்வழிப்பாதைகள் அடைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தொடர் குற்றச்சாட்டுகளை வைத்து வந்தனர்.
இந்நிலையில், ஆற்றில் படர்ந்திருக்கும் ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும் என்றும், ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்கும் விதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேட்டைக்காரன் புதூர் ஊராட்சி, ஒடைய குளம் ஊராட்சி, ஆனைமலை பேரூராட்சி மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இணைந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கோரிக்கையை அடுத்து, முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசி மூலம் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடியை தொடர்பு கொண்டு, இது குறித்து துரித நடவடிக்கை எடுக்குமாறு கூறியிருந்தார். இந்த நிலையில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் படி ஆற்றில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணியில் பொதுப்பணித் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து ஆனைமலை பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி கூறுகையில், “ஆற்றில் கழிவு நீர் ஆறு இடங்களில் கலக்கிறது, இதை முற்றிலும் தடுக்கும் விதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், கோடை மழை துவங்க உள்ளதால் போர்க்கால அடிப்படையில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.