ராயபுரத்தில் அதிகாலையிலையே கள்ளச்சந்தையில் மது விற்பனை.. வைரலாகும் வீடியோ! - Selling liquor in black market
Published : May 18, 2024, 7:42 PM IST
சென்னை: சென்னை இராயபுரம் பகுதியில் மதுக்கடை திறக்கும் முன்பாக, காலையிலேயே கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இது குறித்த வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மதுபானக் கடை மதியம் 12.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை செயல்பட்டு வருகிறது. இருந்த போதிலும், மதுபானக் கடை விடுமுறை நாட்களில், மதுவை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இது குறித்து காவல்துறை நடவடிக்கை எடுத்தும் தொடர்கதையாகவே இருந்து வருகிறது.
இந்த நிலையில், இதற்கு ஒரு படி மேலாக, சென்னை இராயபுரம் பகுதியில் மதுபானக்கடை திறக்கும் முன்னரே காலையிலேயே, மது பாட்டில்களை இருசக்கர வாகனத்தில் வைத்துக் கொண்டு கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வந்துள்ளனர். தற்போது, இது குறித்த வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.
மதுக்கடை திறக்கும் முன்பாகவே அதிகாலையிலேயே கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்துள்ள சம்பவம் குறித்து காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.