வந்தவாசி டூ சபரிமலைக்கு சைக்கிளில் பயணம்.. 67 வயது ஐயப்ப பக்தர் நெகிழ்ச்சி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 2, 2024, 1:00 PM IST

thumbnail

தேனி: கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உலக புகழ்பெற்ற மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இக்கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும், ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருந்து வந்து ஐயப்பனை தரிசனம் செய்வது வழக்கம். இக்கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் வாகனத்தில் செல்வது மட்டுமல்லாமல், சில ஐயப்ப பக்தர்கள் இறைவனை வேண்டி பாதயாத்திரையாக பல கிலோ மீட்டர் தூரம் நடந்தே சபரிமலைக்கு செல்வதும் உண்டு. 

பாத யாத்திரையாக சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேண்டுதலும், இறை பக்தியும் இருக்கும். நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாகவும் நலமுடன் இருக்க வேண்டியும், ஐயப்பன் மீது கொண்டுள்ள அதீத பக்தி காரணமாகவும் சபரிமலை ஐயப்பனை வேண்டி, திருவண்ணாமலை அருகே உள்ள வந்தவாசி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் சைக்கிளில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தனியாக சென்று வருகிறார்

வந்தவாசி முதல் சபரிமலை வரை சுமார் 570 கிலோ மீட்டருக்கு மேல் உள்ள தூரத்தை சைக்கிளில் தனி ஆளாக 5 நாட்களுக்குள் கடந்து விடுவதாக கூறுகிறார் ராஜேந்திரன். மேலும் 67 வயதாகும் ராஜேந்திரன் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக சபரிமலைக்கு சைக்கிளில் பயணம் மேற்கொண்டுள்ளார். 

சைக்கிளில் தனக்கு தேவையான உணவு மற்றும் சைக்கிள் பழுதுபார்க்கும் கருவிகள் உள்ளிட்ட அனைத்து கருவிகளையும் உடன் எடுத்துச் செல்கிறார். சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசனம் செய்த பின்னர் மீண்டும் சைக்கிளில் சொந்த ஊருக்கு திரும்புவதை ராஜேந்திரன் வழக்கமாக வைத்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.