வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பொன்னை பி.ஆர்.குப்பம் பகுதியில் வசித்து வருபவர் விவசாயி மோகன். இவர் தனக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் கடந்த 11 ஆண்டுகளாக பண்ணை அமைத்து நாட்டுக் கோழிகளை வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று (நவ. 26) இரவு முதல் ஆந்திராவில் கனமனை மழை பெய்து வருவதால் தமிழ்நாட்டில் ஓடும் பொன்னை ஆற்றில் சுமார் 20 ஆயிரம் கனஅடி அளவுக்கு வெள்ளம் சென்றுள்ளது. வெள்ளம் அதிகரித்ததால், விவசாயி மோகனின் பண்ணை உள்ளே வெள்ள நீர் புகுந்துள்ளது.
இதில் விற்பனைக்கு தயாராக இருந்த சுமார் 2 ஆயிரத்து 500 நாட்டுக் கோழிகளும், 5 ஆடுகளும் உயிரிழந்தன. அதேபோல் பண்ணை கொட்டகை, கோழி தீவனம் போன்றவையும் சேதமடைந்தன.
இது குறித்து மோகன் வருவாய்துறைக்கு தகவல் கொடுத்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த் துறை அலுவலர்கள் சேதம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதன் மொத்த பாதிப்பு சுமார் 3 லட்சம் ரூபாய் வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது.
கோழி பண்ணையை மட்டுமே வாழ்வாதாரமாக நம்பியிருந்த தனக்கு தமிழ்நாடு அரசு உரிய நிவாரணம் வழங்கி உதவ வேண்டும் என விவசாயி மோகன் கோரிக்கை வைத்துள்ளார்.
இதையும் படிங்க: நிவர் புயலில் அடித்துச் செல்லப்பட்ட வாத்து குஞ்சுகள்